இருமொழித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தேசியமொழிப்பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும், கல்வி அமைச்சு கூறுகிறது

 

memo dlpஇருமொழித் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்தம் 49 தமிழ்ப்பள்ளிகளும் (2016 இல் 30 பள்ளிகள், 2017 இல் 19 பள்ளிகள்) அந்தத் திட்டத்தில் பங்கேற்பதற்கு கல்வி அமைச்சினால் விதிக்கப்பட்டிருக்கும் அடைவுநிலைகளை அடையவில்லை. இந்த 49 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமல்ல. எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் கல்வி அமைச்சால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இன்று இல்லை. ஆகவே, கல்வி அமைச்சு இருமொழித் திட்டத்தில் பங்கேற்க தமிழ்ப்பள்ளிகளுக்கு அளித்திருக்கும் அனுமதியை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்ற இறுதிக்கோரிக்கை நேற்று கோலாலம்பூரில் தமிழ் அறவாரியத்தால் ஏற்பாடு செய்யப்படிருந்த வட்ட மேசை கலந்துரையாடலில் உரையாற்றிய அதன் தலைவர் அ. இராகவன் விடுத்திருக்கிறார்.

இந்த இருமொழித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் உட்பட, கல்வி அமைச்சினால் தேசியப்பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைக் கட்டாயமாகப் பின்பற்றியாக வேண்டும் என்று கல்வி அமைச்சு சமீபத்தில் வலியுறுத்தியுள்ளதாக இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த ஒரு பிரதிநிதி தகவல் அளித்தார்.

மலேசியாவிலுள்ள 131 இந்திய அரசுசார்பற்ற (என்ஜிஒ) அமைப்புகள்   கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் தேதி தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகத்தின் தலைமையில் தமிழ்ப்பள்ளிகள் இருமொழித் திட்டத்தில் பங்கேற்பது இரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கல்வி அமைச்சிடம் தாக்கல் செய்தன.

இந்தக் கோரிக்கைக்கு கல்வி அமைச்சின் துணைத் தலைமை இயக்குனர் கைரி அவாங் கீழ்க்கண்ட பதிலை அளித்துள்ளார்:

1. கல்வி அமைச்சு இந்த கோரிக்கையை அலட்சியம் செய்ய முடியாத ஒன்றாகக் கருதுகிறது;

2. பள்ளிகள் தேசியப்பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்; மற்றும்

3. நிபந்தனைகளைப் பின்பற்றாத பள்ளிகள் இத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதற்கு பிபிடிக்கு கடிதம் எழுத வேண்டும்.

கா. ஆறுமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தின் சாரம் மிகத் தெளிவானது. இருமொழித் திட்டத்தில் பங்கேற்கும் பள்ளிகள் தேசியப்பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் இதற்கு எந்த விதிவிலக்கும் கல்வி அமைச்சால் கொடுக்கப்படவில்லை.

நிபந்தனைகளை நிறைவேற்ற இயலாத பள்ளிகள் இத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள மாநில கல்வி இலாகவுக்கு எழுத வேண்டும் என்பது ஒரு குறும்புத்தனமான ஆலோசனை என்று கூற வேண்டும் என்று கலந்துரையாடலில் பேசியவர் கூறினார்.

ஆனால், ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. நிபந்தனைகளை நிறைவேற்ற இயலாத பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் உட்பட, இத்திட்டத்திலிருந்து அகற்றப்படுவதற்கு கல்வி அமைச்சின் துணைத் தலைமை இயக்குனரின் பதில் வழிவகுக்கிறது

நிபந்தனைகளை நிறைவேற்ற இயலாத தமிழ்ப்பள்ளிகள் இத்திட்டத்தில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் நடந்தது. ஆனால், இதில் யாரோ ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் தலையீடு இருந்துள்ளது, இப்போதும் இருக்கிறது என்று கூறிய அந்தப் பிரதிநிதி, கல்வி அமைச்சின் கடிதப்படி நாம் அதன் கதவைத் தட்ட வேண்டியதில்லை. அது திறந்து இருக்கிறது. உள்ளே சென்று காரியத்தை முடிக்க வேண்டும். யார் செய்வது? அதுதான் கேள்வி என்றாரவர்.