“மதி அற்ற” மந்திரி கேள்வி கேட்டவரை வெளியே சந்திப்போம் என்கிறார்

 

stupiduestion11எம்டிபி பற்றிய விசாரணையில் பிரதமர் நஜிப் சந்தேகிக்கப்படுகிறவரா என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி மந்திரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்குமிடையில் பெரும் வாக்குவாதத்தில் முடிந்தது.

டிஎபி (பூச்சோங்) நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ இரண்டாவது நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனியிடம் கேள்வி கேட்டபோது சூடு கிளம்பியது.

முதலில், அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது என்றார் ஜொஹாரி. அழுத்தம் கொடுத்தவுடன், அவர் கோபிந்திடம் வெளியில் சந்திப்போம் என்று கூறினார்.

இதனால் சினமுற்ற கோபிந்த் தமக்கு பதில் அவையில் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

“எனக்கு பதில் நாடாளுமன்றத்திற்கு வெளியில் கொடுப்பதாகச் சொல்கிறீர். அப்படி என்றால், உம்மிடம் பதில் இருக்கிறது”, என்றார் கோபிந்த்.

இதற்குப் பதில் அளித்த ஜொஹாரி, எம்எசிசி, போலீஸ் மற்றும் சட்டத்துறை அலுவகம் இந்த விசாரணைகள் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கைகளை தம்மால் மாற்ற முடியாது என்று எதிர்வினையாற்றினார்.

கோபிந்த விட்டுக் கொடுக்கவில்லை. அதே கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பினர்.

“விசாரணை நடத்துவது விசாரணை செய்யும் ஏஜென்சிகளின் வேலை. இது ஒரு முட்டாள்தனமான கேள்வி”, என்று ஜொஹாரி பதில் அளித்தார். இதற்கு திருப்பியடித்த கோபிந்த், ஜொஹாரியை “முட்டாள்தனமான மந்திரி” என்று கூறினார்.

ஜொஹாரிக்கு துணையாக இன்னொரு மந்திரி நோ ஒமாரும், கோபிந்தை “முட்டாள்” என்றார்.

நாடாளுமன்ற மக்கள் அவையில் துணைத் தலைவர் ரொனல்ட் கியான்டி இரு முறை தலையிட்டு மக்கள் அவையில் அவ்வாறான சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவுறுத்தினார்.