இந்தியர்களிடையே காணப்படும் குற்றச்செயல்களும் – தமிழ்ப்பள்ளிகளும் – கா. ஆறுமுகம்

Arumugamkampongpandanஇந்தியர்களிடையே காணப்படும் குற்றச்செயல்களுக்கும்  குண்டர்தனத்திற்கும் அவ்வப்போதுத் தமிழ்ப்பள்ளிகளைச் சம்பந்தப்படுத்துவது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுவது போலாகும். இது தவிர்க்கப்பட வேண்டும். வறுமைக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையில் வலுவான தொடர்பு இருந்த போதிலும் ஏழைகளின் சரணாலயமாகத் தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்ற காரணத்தால் அவற்றின் மீது வெறுமனே பழி சுமத்துவது அதன் தார்மீகத்தன்மையைப்  பாதிக்கும்.

குற்றச்செயல்கள் குறித்த உண்மையையும் அதன் பின்னணியையும்  மக்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இது போன்ற அளவுக்கு மீறிய சாதாரண அனுமானங்கள் எழாது. அதோடு  தமிழ்ப்பள்ளிகளின் அமைவுமுறை மீதான நம்பகத்தன்மையை மேலும் மெருகூட்ட இயலும்.

முதலாவதாக, இந்தியர்களுக்கிடையிலான வன்முறை குற்றச்செயல்களுக்கான காரணங்களில் தமிழ்ப்பள்ளிகளும் ஒன்றாக இருப்பதாகக் கூறப்படுவதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிற ஆய்வுகள் ஏதுமே இல்லை. அவ்வாறான உறுதியான நிலை கடந்த பத்து ஆண்டு காலத்தில் குற்றச்செயல் மற்றும் சமூகச் சீர்கேடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

First2ndtarytamilschoolinpenangமலேசியத் தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஸ்லினா அப்துல்லா, 2000 ஆண்டிலிருந்து 2010 ஆண்டு வரையில் பள்ளிச் சிறார்களின் வன்முறை குற்றச்செயல்களிலிருந்து சிறு குற்றச்செயல்கள் வரையிலான சம்பவங்கள் குறித்த 150  ஆய்வுகளைப் பரிசீலனை செய்து  “மலேசியாவில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளின் சமுதாயச் சிக்கல்கள் குறித்த ஆய்வுப் பொருள்கள் மற்றும் பிரச்சனைகள்” என்ற தலைப்பிலான மேலாய்வை வெளியிட்டுள்ளார்.

அதில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான காரணங்களை வகைப்படுத்தியுள்ளார். அதில் எதுவுமே கற்கும் கல்வி மொழியையோ, தமிழ்ப்பள்ளியையோ குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான தொடர்பு கொண்டதாக இல்லை.

அதே வேளையில், இத்தவறான கருத்துக்கு அடிப்படையாக இருப்பது வறுமையில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி கற்பிக்கும் மையமாகத் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதுதான்.  நாற்பது விழுக்காட்டில் கீழ்மட்ட(B40) வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தியச் சமூகத்தில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களுடைய குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

இந்தியர்கள் ஒதுக்கப்பட்ட வறுமை சமூகமாக உருவாக்கப்படுதல்   

மார்கஸ் ஓரிலியஸ், “வறுமை அனைத்துக் குற்றச்செயல்களுக்கும் தாய்” என்றார். நோபல் பரிசு பெற்றவரான பெர்ல் எஸ். பக், “பசி எந்த ஒரு மனிதனையும் திருடனாக்கும்”, என்றார். இக்கருத்துகள், ரோமானிய பேரரசுக்குப் பிந்திய நீண்ட மனித வரலாற்றில், வறுமை என்பது மக்களைக் குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டும் ஆவேசமான ஓர் உந்துகோல் என்று  கண்டனம் செய்துள்ளதை நினைவூட்டுகின்றன.

estate-workers-old-photoநமது நாடு ஒரு பணக்கார நாடு. இங்கு வறுமை தானாக ஏற்படுவதில்லை. சமுதாய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் மத்தியில் பிழித்தெடுக்கப்படும் ஒரு சாரார் குறைந்த வருமானத்தால் எப்போதுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டின் வளத்தையும் மக்களின் உழைப்பையும் சுரண்டும் பொருளாதார அமைப்புமுறையில் தொடர்ந்து இவர்கள் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள்.

வறுமை தானாக உருவாக்கப்படுவதில்லை. அது அரசமைப்பு முறையால் திட்டமிடப்படுகிறது. தற்போது, நமது அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரிம1,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நஜிப் அவர்களுக்குக் கீழ் இயங்கும் கஜானா ஆய்வுக் கழகம் அதன் 2016 ஆண்டிற்கான அறிக்கையில் 11.7 விழுக்காடு குடும்பங்கள், மாதத்திற்கு ரிம2,000 க்கும் குறைவான வருமானம் பெறுகின்றன என்று அடையாளம் கண்டுள்ளது. ஐந்து பேர்  அடங்கிய ஒரு சராசரி அளவிலான குடும்பம் இந்த வருவாயில் வாழ இயலாது. இவை வரவுக்கும் மிஞ்சிய செலவில் கடனாளியாகத்தான் வாழ்க்கையை நடத்த வேண்டும். இவர்களுக்குச் சிறந்த வாழ்க்கை என்பதைக் கானல்நீராகத்தான் பார்க்க இயலும்.

2015 ஆம் ஆண்டில் த எக்கனோமிக் ஜெர்னல் ஆப் மலேசியா, யூனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியாவின் (USM) மூத்த உறுப்பினர்கள் முனைவர் சோர் ஃபூன் டாங் மற்றும் முனைவர் செஸாலி முகமட் டாரிட் ஆகியோர் ஒரு முக்கியமான ஆய்வை நடத்தினர். அதன் நோக்கம் நல்ல பொருளாதாரத்தை உருவாக்கக் குற்றங்களைக் குறைக்க வேண்டும். அதற்குக் குற்றச்செயல்களுக்கான காரணங்களைக் கண்டு பிடித்து அவர்றை சீர் செய்ய வேண்டும் என்பதாகும்.

அவர்கள் 1970 இல் இருந்து 2013 வரையிலான குற்றப்பதிவுகளை  ஓர் அனுபவ அடிப்படையிலான வழிமுறைகள் யாவை என்ற வகையில் ஆய்வை மேற்கொண்டனர். வறுமை மற்றும் வேலையில்லாமை ஆகிய இரண்டும்தான் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்று அந்த ஆய்வின் முடிவு திட்டவட்டமாகக் கூறிற்று.

ஏப்ரல் 23, 2016 இல், நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சர், வன்செயல் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட 23,186 பேர்களில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் மற்றும் 33 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்று தெரிவித்தார். இவை மக்கள் தொகை விழுக்காட்டோடு ஒப்பீடு செய்யும் போது இந்தியர்கள் மக்கள் தொகையைவிட நான்கு மடங்கு அதிகம் உள்ளனர். அந்த அளவிக்கான பாதிப்பு என்கிறது ஆய்வு.

2004 ஆம் ஆண்டில், திரங்கானு-கிளந்தான் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 204 க்கும் கூடுதலானவர்களுடன் நடத்தப்பட்ட ஒரு புறவெளி ஆய்வில் யுஐடிஎம் (UiTM) திரங்கானுவின் முனைவர் ஹசான் பாரோம், சுமார் 80 விழுக்காட்டினரின் மாதக் குடும்ப வருமானம் ரிம1,000 க்கும் குறைவானது என்றும், அதில் 40 விழுக்காட்டினர் ரிம500க்கும் குறைவான குடும்பவருமானம் பெற்றவர்களாவர் என்றும் ஆவணப்படுத்தியுள்ளார்.

குறைந்த வருமானம் குற்றம் புரியத் தூண்டுகிறது

கோலாலம்பூர் அரச மலேசியப் போலீஸ் கல்லூரியைச் சேர்ந்த அமர் சிங் சிது 1990 ஆண்டிலிருந்து 2002 ஆண்டு வரையிலான குற்றங்கள் குறித்த தகவல்களை நுணுக்கமாக ஆராய்ந்து 2005 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான  முன்னோடி ஆய்வுப் படைப்பை வெளிட்டார்.

அதன் முக்கியச் சாரம், குறைந்த வருமானம் குற்றம் புரியத் தூண்டுகிறது என்பதாகும். பணமின்மை குற்றம் புரியும் மனப்பாங்குடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவை வலியுறுத்தியுள்ளார்.

Stateless-Indiansஆய்வுக்கு உட்படுத்திய 49,243 குற்றம் சாற்றப்பட்ட கைதிகளில் 95 விழுக்காட்டினர் மாதம் ஒன்றுக்கு ரிம1,142 க்கும் குறைவான வருமானம் பெற்றனர். இது உண்மையிலேயே ஓர் ஆபத்து எச்சரிக்கைச் சமிக்கை என்கிறார் அமர் சிங்.

அமர் அவரது ஆய்வில் நகர்ப்புற வறுமை இந்தியர்களைக் குண்டர்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்குத் தள்ளுகிறது. அதனால்தான்  இந்தியர்களின் அதிகப்படியான பிரதிநிதித்துவத்திற்கு ஒரு கூறாக அமைவாதாகக் கூறுகிறார்.

தேசிய நீரோட்டதிலிருந்து ஒதுக்கப் பட்ட நிலையில், தோட்டப்புறங்களை நம்பி வாழ்ந்த மக்கள், அங்கிருந்து விரட்டப்பட்டபோது அவர்களது தோட்டப்புற வாழ்வாதரப் பின்னணி சிதைந்தது. அதனால் ஒதுக்கப்பட்டனர், அதோடு ஓரங்கட்டப்பட்டனர். அவர்களது  தனிமைப்படுத்தப்பட்ட சூழல் ஓர் ஏழ்மை பண்பாட்டை உருவாக்கியது. கிராம-நகர்ப்புற இடமாற்றம் அவர்களின் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் வாழ்வியலை வேரறுத்தது.

தோட்டத்தொழில்துறையின் வளர்ச்சிக்காக ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கடுமையாக உழைத்த, ஆக்கவளமுள்ளவர்களாக விளங்கிய தொழிலாளர்கள் எவ்விதச் சமூகப் பாதுகாப்புத் திட்டமும் அற்ற  வகையில் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் கைவிடப்பட்டனர்.

சில பிரிவினர்கள் இதிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்தனர் என்றாலும், மற்றவர்கள் நகர்ப்புற வறுமையில் சிக்குண்டு செயலற்றவர்களாகி விட்டனர். அரசாங்கக் கொள்கைகளால் ஓரங்கட்டப்பட்ட அவர்களுக்கு இனபேதமின்றி வறுமையை ஒழித்துக்கட்ட   1970 இல் அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையில் இடம் அளிக்கப்படவில்லை. அது இன அடிப்படையில் அமுலாக்கமானது. அதன் வழி வறுமையில் வாழும் இந்தியர்கள் நலன் பெற அரசாங்க வழங்கிய பல்கலைக்கழக ஒதுக்கீடுகள், உபகாரச்சம்பளம், பொருளாதாரத்திட்டங்கள் போன்றவை கட்சி அரசியலில் சிக்கி வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கே பயனாக அமைந்தது.

அரசாங்க ஆதரவு இன்றி தனிமை படுத்தப்பட்ட இவர்கள் வேலையின்மை, போதுமான வேலையில்லாமை மற்றும் குறைத்த சம்பள வேலைகள் போன்ற சூழலால் பாதிப்படைந்தனர். இந்த நிலைதான் அவர்கள்  குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டுகோளாக அமைந்தன.

 தமிழ்க்கல்வி அல்லது கல்வியே இல்லை என்ற நிலை

தமிழ்ப்பள்ளிகளை  மலேசியக் கல்வி அமைவுமுறைமையின் தத்துப்பிள்ளை என்று அழைக்கும் முனைவர் டி. மாரிமுத்து 1987 இல் அவரது முன்னோடிப் படைப்பில் அதை கீழ்க்கண்டவாறு சுருங்கக் கூறுகிறார்:

“அருகிலுள்ள தமிழ்ப்பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட ஏழை தோட்டப்பாட்டாளிகளின் குழந்தைகள் அப்பள்ளிகளைத் தங்களுடைய கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான வழியாகப் பயன்படுத்த இயலவில்லை.”

“இதற்குக் குடும்பச் சூழல் மற்றும் தரக்குறைவான கல்வி புகட்டப்படுதல்  ஆகியவற்றிலிருந்து தொடங்கும் சமுதாய-பொருளாதார மற்றும் பண்பாட்டு கூறுகள் காரணங்களாக அமைகின்றன.”

worker“தோல்வி தனிமைபடுத்தப்படுகிறது. தனிப்பட்டவர் பழியைச் சுமக்க வேண்டும். தொழில் உலகில் திறமை தேவைப்படாத, குறைந்தபட்சத் திறமை தேவைப்படும் அல்லது பகுதித் திறமை தேவைப்படும் பணி வகைகளை நிரப்புகின்றனர். அன்றிருந்த நிலைமையே இப்போதும்:  ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் சிறந்த தோட்டத் தொழிலாளியாக உருமாற்றம் காண்கிறான்.”

பொருளாதார நிபுணர் ஆர். தில்லைநாதன் அவரது ஓர் ஆய்வுக்கட்டுரையில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகளுக்கு ஒன்று ‘தமிழ்க் கல்வி அல்லது கல்வியே இல்லை’ என்ற எச்சரிக்கையை 1988 இல் விடுத்திருந்தார்.

அவர் தாய்மொழிக் கல்வி ஒரு நெருங்கிய தொடர்பு கருவி என்றும் அதில் மட்டுமே அவர்களால் அடிப்படை திறன்களைப் பெற இயலும் என்கிறார். மேலும் தமிழ்பள்ளிகளின் அருகாமை, பிறமொழி பள்ளிகளில் தொடர்பு கொள்ளும் ஆற்றல் இல்லாத சுற்றுச்சூழல், ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த தமிழ் பேசும் குழந்தைகள் அடையும் பண்பாட்டு அதிர்ச்சி போன்ற கூறுகள் தமிழ்ப்பள்ளிகள்தான் இவர்களின் ஒரே தீர்வுப் பொருள் என்றார். இந்தக் கருத்துப்பாங்கில் உண்மை இருக்கிறது.

1998-இல் 15,000 இந்தியக் குழந்தைகள் பள்ளிக்குப் போகவில்லை

1990 லிருந்து 2000 ஆண்டு வரையிலான தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை ஒப்பிடு அளவிலும் எண்ணிக்கை அளவிலும் பெரிய சரிவு உள்ளது. 1993 ஆம் ஆண்டு மிக அதிகமான, சுமார் 104,600 குழந்தைகள், தமிழ்ப்பள்ளிகளில் பதிவு செய்யப்பட்டதைக் கண்டது.   ஆனால், 2000 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 90,280 க்கு வீழ்ச்சி கண்டது. ஆனால். அதே காலக்கட்டத்தில் பள்ளி செல்வோரின் இந்தியக் குழந்தைகளின் கணக்கெடுப்பில் அதிகரிப்பு இருந்தும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.

1998 ஆம் ஆண்டில், பள்ளியில் பயின்ற மொத்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை, மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்ததில், 6 லிருந்து 11 வயதுக்கிடையிலான சுமார் 15,000 இந்தியக் குழந்தைகள் எவ்வகை ஆரம்பப்பள்ளிகளிலும் பதிவு செய்யப்படவில்லை. இக்குழந்தகைகள் தொழிலாளர் வர்க்கத்தைத் தவிர மற்றப் பிரிவினர்களைச் சார்ந்தவர்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

இதற்கான ஒரு சரியான விளக்கம் 1990 லிருந்து 2000 வரையிலான காலம் நாட்டின் பொருளாதாரம் துரிதமான மேம்பாடு கண்டது, குறிப்பாக விவசாய நிலங்களின் மேம்பாடு. இது பெருமளவிலான தோட்டத் தொழிலாளர்கள் நகர்புறங்களுக்கு இடம் பெயர்தலுக்கு இட்டுச் சென்றது.

இதனால் தோட்டங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் பதிவு மிகக் கடுமையான வீழ்ச்சி கண்டது. இது நகர்ப்புறப் பள்ளிகளின் பதிவில் சமமான அதிகரிப்புக்கு இட்டுச் செல்லவில்லை. இதன் பொருள் நகர்புறச் சுற்றுச்சூழலில் தமிழ்ப்பள்ளிகள் கிடைக்காததால் இந்த 15,000 குழந்தைகள் பள்ளி அமைவுமுறையில் இடம் பெறவில்லை என்பதாகும்.

மாணவர்களின் தரம் என்பது சமூகப் பொருளாதாரத்தைச் சார்ந்தது

தமிழ்ப்பள்ளி தரமான மாணவர்களை உருவாக்குவதில்லை என்ற வாதம் தவறாகும். தரத்திற்கும் கற்பிக்கும் மொழிக்கும் தொடர்பு இல்லை என்கிறார் முனைவர் ஆர். சந்திரம்.

கற்பிக்கும் மொழியை விடக் குழந்தைகளின் சமுதாய-பொருளாதார சூழல் முக்கியமானது. 1999 இல் வெளியிடப்பட்ட அவரது தேசியப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் ஆகிய இரண்டிலும் பயிலும் ஏழ்மையான சமுதாய-பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குழந்தைகள் பற்றிய முகடு சார்ந்த நுண்ணாய்வு அடிப்படையில்  மேற்கொண்ட ஆய்வு அவர்களின் செயலாக்கத்தில் எவ்வித முக்கியமான வேறுபாட்டையும் வெளிப்படுத்தவில்லை. ஒரு சிறிய வேறுபாடு மலாய் மொழியில் மட்டும்தான் இருந்தது என்கிறார் சந்திரம்.

தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் செயலாக்கம் இதர மொழிப்பள்ளிகளின் செயலாக்கத்தை விடக் கீழ்த்தரமானது என்பதை நிருபிக்க ஏதுமில்லை. மாறாக,  தற்போது, தமிழ்ப்பள்ளிகள் மேல்நோக்கிய பொதுப்போக்கைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் செயலாக்கங்கள் தேசியச் சராசரியுடன் ஒப்பிடக்கூடிய அளவில் மாற்றம் கண்டுள்ளன. மேலும் உயரும் என்ற நம்பிக்கையும் உருவாகி வருகிறது.

முடிவுரை

தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமூகச் சீர்கேடுகள் மற்றும் வன்முறைக்கும்  சம்பந்தம் கிடையாது. இப்படித் தொடர்புபடுத்தும் வகையில் எந்தச் சான்றும் கிடையாது. ஊக அடிப்படையில் கருத்து பதிவு செய்வது கண்டனதிற்குறியதாகும்.

hindraf1சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணமே தற்போதுள்ள மோசமான கொள்கை கட்டமைப்புதான். நமது நாட்டின் பொருளாதாரக்  கொள்கை தாராளவாதத்தன்மை கொண்டது. தாராளவாதத்தன்மை என்பது பெரும் நிதிவளம் படைத்த நிறுவனங்கள் நமது நாட்டில் முதலீடு செய்து மேலும் பணம் சாம்பாதிக்க வசதி செய்து கொடுப்பதாகும். அதாவது பணம் கொண்ட முதலாளிகள் தங்களின் பணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் கொள்கைகள் வகுத்து ஊக்கம் கொடுக்கும். இது ஒருவகையான ஊழல் பொருளாதாரமாகும்.

செல்வ வளம் திரட்டுதலில் விரிவடைந்து வரும் சூழல் மற்றொரு நிலையில் வறுமையை அதிகமாக்கும். எளிமையாகச் சொன்னால், பள்ளத்தை வெட்டி மேட்டைக் கட்டுவதாகும். இதில் சமத்துவம் கிடையாது.

இந்தச் சமத்துவமின்மையை அரசாங்கக் கொள்கையற்ற நிலையில்  சரிப்படுத்த இயலாது. பிரதமர் நஜிப் அவர்களின் கஜனா ஆய்வுக் கழகத்தின் 2016 ஆண்டின் அறிக்கையும் இதைத்தான் காட்டுகிறது. அதாவது, அவ்வப்போது கொஞ்சம் சம்பளத்தைக் கூட்டிக் குறைந்த சம்பளம் மாதம் ரிம 1,000 என்றால் எல்லளவும் வறுமை சமூகத்தின் பிரச்சனை தீராது. விலைவாசி ஏற்றத்தால் மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்கையில் கீழ்மட்டத்தில் வாழும் மக்கள் கடனாளியாகவே வாழ வேண்டியுள்ளது. அவர்களுக்குத் தேவை அரசியல் சார்ந்த கொள்கைத் தீர்வுகள் ஆகும்.