பிரித்தானியாவில் தீவிரவாதத்தை வளர்க்கும் முக்கிய நாடு இதுதான்: வெளியான தகவல்

பிரித்தானியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்க்க அதிக நிதி உதவி அளிக்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சவுதி அரேபியா என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலானவை அறிந்துகொண்டே இஸ்லாமிய பயங்கரவாதத்தை பிரித்தானியாவில் வளர்ப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் சவுதி அரேபியா அதிக நிதி உதவி வழங்கி பிரித்தானியாவில் மத அடிப்படைவாதிகளை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் உள்ள மசூதிகளுக்கு நிதி உதவி அளிப்பது, இஸ்லாமிய கல்வி நிலையங்களுக்கு நிதியும், அங்குள்ள மத குருக்களுக்கு சவுதியில் பயிற்சியும் மேற்கொள்ள வழிவகை செய்து வருகிறது. இது கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் அங்குள்ள கலாச்சாரங்களுக்கு எதிராக தனித்துவமான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கவே மத்திய கிழக்கு நாடுகள் முயன்று வருவதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்படுகிறது.

குறித்த செயல்பாடுகளுக்காக திரளான நிதி குவிந்துள்ளது என கண்டறிந்துள்ள அந்த ஆய்வறிக்கை, ஆனால் அதன் மொத்த மதிப்பு என்ன என்பது ரகசியமாகவே உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த ஆய்வானது முழுமை பெற்றாலும், அது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட மாட்டாது என அதன் முக்கிய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவி குவிவது பிரித்தானியா மட்டுமல்ல பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை தொடர்வதாகவும் தெரிய வந்துள்ளது.

-lankasri.com