டிரம்பும், புதினும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்திப்பு

donald putin

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்கியுள்ள ஜி 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் அவர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிகொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம் பாதிப்படைந்துள்ள தொடர்புகளை சரிசெய்ய விரும்புவதாக அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்கு வெளியே போராட்டங்கள் நடைபெற்று வருகையில், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பருவநிலை மாற்றமும், வர்த்தகம் பற்றியும் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெறும் போராட்டங்களால் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்பால் ஹோட்டல் அறையைவிட்டு வெளியேவர முடியவில்லை.

டிரம்பும், புதினும் பங்கேற்பது, பருவநிலை மாற்றம், உலகளாவிய செல்வ சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக போராடும் ஆப்பாட்டக்காரர்களை உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்று வருகின்றனர். இதற்கு அவர்கள் தண்ணீரை அடித்து மக்களை கலைத்துள்ளனர்.

donald putin1

காவல்துறை மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களாலும், சிலர் எறிகுண்டுகளை வீசியதாலும், இரு தரப்பிலும் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

20 நாடுகள் குழு என்பது வளர்ந்த, வளர்முக நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என 19 நாடுகளின் ஒரு உச்சி மாநாடாகும்.

இந்த உச்சி மாநாட்டின் துவக்கத்தில் ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் பேசுகையில், “உலகளாவிய சவால்களை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். நமக்கு நேரம் குறைவாகவே இருக்கிறது. மிகவும் பின்னோக்கி செல்லாமல், சமரசத்திற்கும், ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவதற்கும் நாம் தயாராக இருந்தால்தான் தீர்வுகளை காண முடியும். ஆனால், ஒரே பிரச்சைனையில் வேறுபட்ட பார்வைகளை நாம் நிச்சயம் வெளிப்படுத்த முடியும்” என்று பேசியுள்ளார்.

டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை

ஜெர்மனி அரசின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குறுகிய காணொளியில் டிரம்பும், புதினும் கைகுலுக்கிக் கொள்கின்றனர். பிற தலைவர்களின் மத்தியில் அவர்கள் இருவரும் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில், டிரம்ப், புதினின் கையில் தட்டுவதும் பதிவாகியுள்ளது. இருவரும் தற்போது இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுவார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த உச்சி மாநாட்டிற்கு முன்னர் முக்கிய சர்வதேச பிரச்சனைகளில் இந்த இரு தலைவர்களும் எதிரெதிர் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

வியாழக்கிழமை போலந்தின் தலைநகர் வார்சோவில் அதிபர் டிரம்ப் பேசியபோது, உக்ரைன் மற்றும் பிற நாடுகளில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்குவதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றும், “பொறுப்புள்ள நாடுகளின் சமூகத்தில்” சேர வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

20 நாடுகள் குழுவின் (ஜி20) நிகழ்ச்சிநிரல் பற்றி ஜெர்மனியின் நிதி சார் செய்தித்தாளிடம் புதின் பேசுகையில், 2014 ஆம் ஆண்டு க்ரைமியாவை இணைத்துக் கொண்டபோது அமெரிக்காவின் தலைமையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை விலக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

“பருவநிலை மாற்றம் பற்றிய நீண்டகால விதிகளுக்கு பாதுகாப்பான அடித்தளம்” என்று கூறி பருவநிலை மாற்றம் பற்றிய பாரிஸ் ஒப்பந்தத்தற்கு புதின் பலத்த ஆதரவு தெரிவித்திருந்தார். “அதனை நடைமுறைப்படுத்த விரிவான பங்களிப்பு” செய்ய ரஷ்யா விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியுள்ளார்.

ரஷ்யா பற்றி குறிப்பிடுவதற்கு வார்சாவில் டிரம்ப் பயன்படுத்திய சொற்களின் தெரிவு, ரஷ்ய அதிபர் புதினோடு மிகவும் நெருக்கமாக இருப்பதாக பார்க்கப்படுவதில் இருக்கும் அரசியல் ஆபத்தை டிரம்ப் உணர்ந்திருப்பதை காட்டுகிறது என்று பிபிசியின் ராஜீய உறவுகள் பற்றிய செய்தியாளர் ஜேம்ஸ் ராபின்ஸ் தெரிவித்துள்ளார். -BBC_Tamil