பணத்திற்காக கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள்! விசாரணைகளில் அம்பலமான உண்மை

torture4கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் பணத்திற்காகவே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவிற்கு எதிராக 2009ம் ஆண்டு குற்றத்தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த முறைப்பாட்டில் சம்பத் முனசிங்க தங்கியிருந்த இடத்தில் இருந்து அடையாள அட்டைகள், கடவுச்சீட்டு, வெடிபொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பத் முனசிங்க தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, திருகோணமலையைச் சேர்ந்த தியாகராஜா ஜெகன், கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த கஸ்தூரி ஆராச்சிகே அன்டனி, மன்னாரைச் சேர்ந்த சூசைப்பிள்ளை அமலன் லியோன் மற்றும் அவரது மகன் சூசைப்பிள்ளை ரொஷான் லியோன் ஆகியோரின் அடையாள அட்டைகளே மீட்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், தெஹிவளை பகுதியில் வைத்து 5 பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் லெப்டினன்ட் ஜெனரல் சம்பத் ஹெட்டியாராச்சிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

கடத்தப்பட்டவர்கள், கடற்படையின் தொலைபேசிகள் ஊடாக தமது உறவினர்களுக்கு பேசியமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக” பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க இரண்டு குழுக்களை கொண்டு நடத்தியதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை சந்தித்து பேசியமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞர்கள் பணத்திற்காகவே கடத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

TAGS: