நோயாளிகள் உயிருக்கு உலை வைக்கும் மருந்துகள் நடிகர் சத்யராஜ் மகள் பிரதமருக்கு பரபரப்பு கடிதம்

sathyaraj’sதவறான மருந்தை சிபாரிசு செய்யும்படி அமெரிக்க நிறுவனம் என்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் சத்யராஜ் மகள் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,-

பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திவ்யாவை அமெரிக்க மருந்து நிறுவனத்தை சேர்ந்த சிலர் அணுகி நோயாளிகளுக்கு தங்கள் மருந்தை சிபாரிசு செய்யும்படி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து திவ்யா பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“மருந்துகள் உயிரை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருந்து நிறுவனங்களில் பல மோசமான காரியங்கள் நடக்கின்றன. நான் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றுகிறேன். சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க மருந்து கம்பெனியை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் என்னை சந்தித்தனர்.

அவர்கள் தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை என்னிடம் கொடுத்து அவற்றை உங்கள் ‘கிளினிக்’கில் உள்ள நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யுங்கள் என்றனர். அது பலவகை வைட்டமின் சத்துக்கள் கொண்டது என்றும் கூறினார்கள். அந்த மருந்தில் என்ன கலந்து இருக்கின்றன என்று நான் ஆராய்ந்த போது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் அதில் இருப்பது தெரிய வந்தது. ஊக்க மருந்துகளும் கலக்கப்பட்டு இருந்தது.

அந்த மருந்தை நோயாளிகள் சாப்பிட்டால் உடலில் அதிகமாக உயிர் சத்துக்கள் உருவாகி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கண்பார்வையும் பாதிக்கும். நாளடைவில் ஈரல் கோளாறுகளும் ஏற்படும். எனவே நான் அந்த மருந்துகளை சிபாரிசு செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர். அதையும் வாங்கவில்லை.

இதனால் அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. என்னை மிரட்டினார்கள். நாங்கள் இந்தியாவில் உள்ள ஒரு மந்திரி வீட்டில்தான் தங்கி இருக்கிறோம். அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்று கூறினார்கள். அதன்பிறகு இந்திய டாக்டர்கள் விஞ்ஞான ரீதியாக இதையெல்லாம் ஆராய்வது இல்லை. நாங்கள் கொடுக்கும் மருந்துகளை சிபாரிசு செய்து விடுவார்கள் என்றனர்.

அவர்களிடம் நான், இந்திய டாக்டர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. உலக அளவில் பெரிய மரியாதைக்குரியவர்களாக இந்திய டாக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி தரக்குறைவாக பேச வேண்டாம் என்று எச்சரித்தேன். மீண்டும் அவர்கள் என்னிடம் தங்களுடைய அரசியல் செல்வாக்கை சொல்லி மிரட்டி விட்டுச்சென்றார்கள்.

அந்த மருந்தில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற குறிப்புகளை இந்த கடிதத்தில் இணைத்து இருக்கிறேன். இது ஒரு முக்கிய பிரச்சினை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மருந்துகள் அனுமதி இல்லாமல் இந்தியாவுக்குள் வந்தால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும். இத்தகைய மருந்து மோசடிகளை தடுக்க வேண்டும்.

ஆஸ்பத்திரிகளில் தங்களுக்கு சரியான மருந்து கொடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு கிடைக்க வேண்டும். ஏழை மக்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. நீட் தேர்வானது முறைகேடுகளுக்கு வழிவகுத்து உள்ளது. இப்படி இருந்தால் தரமான டாக்டர்கள் உருவாக முடியாது.

இவ்வாறு கடிதத்தில் திவ்யா கூறியுள்ளார்.

-dailythanthi.com