தங்கத்தின் பின்னால் இருக்கும் சோகக் கதை: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

உலகம் முழுவதும் உள்ள மக்களால் தங்கம் பல்வேறு விடயங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஜொலிக்கும் தங்கத்துக்கு கருப்பு பக்கங்களும் உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சிறிய நாடு புர்கினா ஃபாசோ (Burkina Faso) 1.7 கோடி ஜனத்தொகையை இந்நாடு கொண்டுள்ளது.

பெரும்பாலான ஆப்பிரிக்கா நாடுகளை போல புர்கினாவிலும் எல்லா வளங்களும் இருந்தும், வல்லரசு நாடுகளின் ஏமாற்று வேலைகளுக்கு பலியாகி கொண்டிருக்கிறது.

ஆம், தங்கம் இருக்கும் சுரங்கத்தில் இந்நாட்டு மக்கள் அதை வெளியில் எடுக்கும் கடுமையான வேலையில் ஈடுபடுகிறார்கள்.

13 வயதிலிருந்தே சிறுவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அனல் கொதிக்கும் இந்த இடத்தில் பெரும்பாலானோர் செருப்பு அணியாமலே உலா வருகிறார்கள்.

அங்குள்ள குழியின் ஆழம் 100 அடி வரை இருக்கும். அதனுள் ஒருவர் நுழைவதே கஷ்டம் என்ற நிலையில், நாள் முழுக்க அதற்குள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து மக்கள் இறங்கி வேலை செய்கிறார்கள்.

குறிப்பாக, பசியில் வாடி, ஒட்டியிருக்கும் உடம்பைக் கொண்டிருக்கும் சிறுவர்களால் எளிதில் அந்தக் குழிகளினுள் நுழைய முடியும் என்பதாலும், வறுமையைத் தீர்க்க வேறு வழி இல்லாததாலும் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

குழிக்குள் இறங்குபவர்கள் அங்குள்ள பாறைகளை உடைத்து கற்களை வெளியில் எடுக்கிறார்கள். அதில் சில கற்களில் தங்கத் துகள்கள் இருக்கும்.

அந்தக் கற்களை எடுத்து தூள் தூளாக உடைத்த பின்னர் தங்கத் துகள்களைப் பிரித்தெடுக்கிறார்கள்.

பின்னர், அதை சில செயல்முறைகளுக்கு உட்படுத்தி, அதை பாதரசத்தோடு கலக்கிறார்கள்.

பாதரசத்தை வெறு கைகளால் தங்கத்தோடு கலக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானதாகும்.

பின்னர், கலந்த தங்கத்தை சூடாக்குகிறார்கள். அப்போது பாதரசம் உருகி தனியாக பிரிகிறது. இதை சூடு பண்ணும் போது வெளியேறும் புகை, கடுமையான நோய்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

இவ்வளவும் செய்தால் ஒரு நாளைக்குத் தோராயமாக 80 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இந்த தங்கம், ஏஜண்டுகளால் உலகம் முழுவதும் விற்கப்படுகிறது. இந்த வேலை செய்வதால் உடல் கடுமையாக வலிக்கும்.

அதை சமாளிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பழக்கத்துக்கு அடிமையாகி கிடக்கிறார்கள்.

10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 600க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன.

எப்போதும் புழுதியிலேயே உழன்று கிடப்பதால் இருமல், ஆஸ்துமா, மலேரியா, கல்லீரல் என உடல் ரீதியில் நிறைய பிரச்னைகளைச் இந்த மக்கள் சந்திக்கிறார்கள்.

-lankasri.com