ஆலயங்கள் பக்திக்காகவா? பணத்திற்காகவா?

templeஞாயிறு நக்கீரன், ஜூலை 31, 2017.

ஆலயங்களில் நடைபெறும் ஆறு கால பூஜைக்கும் ஆரிய குருக்கள்களுக்கும் தோதாக இரவு பகல் எந்நேரமும் அடிமை ஊழியம் புரிவதற்காக வல்லடியாக நடைமுறைப் படுத்தப்படும் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த பெண் போராளியான முத்து லெட்சுமி அம்மையார் பிறந்த நாளான ஜூலை முப்பதாம் நாளில் ஆலயக் கருத்தரங்கை மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்தது தெரிந்தோ தெரியாமலோ அமைந்துவிட்ட ஒரு பொருத்தம்.

இந்த நாட்டில் இஸ்லாம், கிறித்துவம், பௌத்தம், இந்து, சீக்கியம், தாவோயிசம் உள்ளிட்ட அனைத்து சமயங்களையும் இந்த மண்வாழ் மக்கள் பற்றியொழுகுவதற்கான சமய சுதந்திரத்தை மலேசிய அரசியல் சாசனம் வழங்குகிறது. இருந்தபோதும், இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் காலந்தோறும் நெருக்கடியை சந்தித்து வருவதைப் பற்றி நேற்று நடந்து முடிந்த ஆலய தேசியக் கருத்தரங்கில் கனமான விவாதம் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

அதைப் பற்றிய விழிப்புணர்வும் ஈடுபாடும், மரத்தின் உச்சியில் உள்ள இலை காற்றில் இலேசாக அசைவதைப் போன்ற அளவில் இருந்தது, இந்து சமயத்திற்கு.. .. குறிப்பாக, மலேசியவாழ் இந்துப் பெருமக்களுக்கு பேரிழப்பாகும்.

இந்து சமய மக்கள், தங்களின் இறைநேச வேட்கையை நிறைவேற்றவும் எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி தொழவும் உருவாக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்பொழுது திடீர்திடீரென புல்டோசர் இயந்திரங்களுக்கு இறையாவதும் வழிபாட்டு உருவங்களைச் சிதைப்பதும் நடைபெறத்தான் செய்கிறது.

இப்படி நடக்கும்பொழுதெல்லாம் சம்பந்தப்பட்ட ஆலயங்களை நிர்வகிக்கும் தரப்பினர், உடனடியாக செய்யும் வேலை ஒன்றுதான். அது, தமிழ் ஊடகங்களுக்கு உடனே அறிக்கை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வதுதான்.

அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்ட மற்றத் தரப்பினர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை வஞ்சகமில்லாமல் தொடர்வர். அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினர் சற்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பதுடன் சரி!

mictempledemolitionஆலயத்தின்வழி சமய மறுமலர்ச்சிக்கோ அல்லது சமூக மேம்பாட்டிற்கோ ஒரு சிறு துறும்பையும் கிள்ளிப்போடாத சில நிருவாகத் தரப்பினர், பக்தர்களை வசப்படுத்தி பரிகார-பூசை-புனஸ்காரப் பணிகளை மட்டும் தொய்வின்றி செவ்வனே நிறைவேற்றி அதன்வழி ஆதாயம் தேட மட்டும் தவறுவதில்லை. தம்முடைய ஆலயத்திற்கு அடிப்படையான நில உரிமைக்கு, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமே என்று அக்கறைப்படுவதில்லை.

ஏனைய சமயத்தினர் வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்தும் முன், முதலில் இடத்தை வாங்குவார்கள். மாறாக, நமது பக்தர்கள் தனியார் இடத்திலும் புறம்போக்கு நிலத்திலும் வசதிக்காகவும் அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்பவும் வழிபாட்டு ஆலயங்களை சிறியதாகவோ பெரியதாகவோ அமைத்துக் கொள்கின்றனர். இதனால் பல சிரமங்கள், அழுத்தங்கள் இவற்றின் தாக்கம் அரசியலாக்கப்படுகிறது.

அந்த இடத்தில் இருந்து அவர்கள் பெறும் ஆதாயம் அதிகம். சமயத் தொண்டு, மக்கள் சேவை என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். சொந்த ஆதாயம்தான் முதல் இலக்கு; குறித்த இடம் சம்பந்தமாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதையும் புறக்கணித்து விடுவார்கள். இதுவெல்லாம் பொதுமக்களுக்குத் தெரியாது.

திடீரென்று ஒருநாள் காலையில்  அமலாக்க அதிகாரிகளும் காவலர்களும் புடைசூழ மண்வாரி இயந்திரம் வந்து நின்றதும், “ஐய்யோ.. ஐய்யோ.. நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த சக்திமிக்க ஆலயத்தை அடித்து நொறுக்குகிறார்கள்” என்று படம் பிடித்து புலத்தின்வழி தகவல் பரப்பவும் பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைபேசி செய்யவும்தான் தெரிகிறது. அடுத்தவரின் இடத்திலோ அல்லது பொது இடத்திலோ ஆலயத்தை அமைத்திருந்தால், அந்த இடத்தில் பிரச்சினை ஏற்படும்பொழுது, மாற்று ஏற்பாட்டை செய்யத் தெரியாத உங்களுக்கெல்லாம் எதுக்கு ஆலய நிர்வாகப் பொறுப்பு?” என்று இதுவரை ஒருவரும் கேட்டதில்லை;

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எதிர்காலத்தை கணிக்க முடியாமல் இப்படி ஏதும் செய்திருக்கலாம். ஆனால், நாடு விடுதலை அடைந்து இந்த ஆண்டில் சுதந்திர மணிவிழாவைக் கொண்டாடும் நேரத்திலும் இந்தப் பிரச்சினைத் தொடரலாமா?

வழிபாட்டுத் தலத்தை உருவாக்கும் முன், முதலில் இடத்தை முறைப்படி பெறாமல் இப்படி ஆலயத்தை அமைத்து, கடைசியில் இந்து சமயத்திற்கு இழுக்கைத் தேடித்தரும் ஆலய நிர்வாகத் தரப்பினரைக் கண்டிக்க.., குறைந்தபட்சம் சுட்டிக்காட்ட ஒருபொழுதும் ஒருசாராரும் எத்தனிப்பதில்லை. அதனால்தான் இந்து சமயத்திற்கு நேரும் இந்த அவலம் இன்னும் தொடர்கிறது.

இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மலேசிய இந்து சங்கம் முன் வருமா? அல்லது இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து அரசியல் ஆக்கப்பட்டு ஆதாயம் தேடுபவர்களுக்கு துணை போகுமா? உரிமையை கோரவும் அதை நிலைப்படுத்தவும் பாதுகக்கவும் இந்து சங்கம் முயல்கிறது. ஆனால், உரிமையின் மறுபக்கம் பொறுப்புணர்ச்சியாகும். அதைப் பற்றிய தெளிவு இந்து சங்கத்திற்கு உள்ளதா என்பது கேள்விக்குறியாகி வருகிறது.