ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்கும் புதுச் சட்டம் கைவிடப்பட்டது

azalinaபெற்றோர்   இருவரில்    ஒருவர்,  மற்றவரின்   இணக்கமின்றி    குழந்தையை  மதம்   மாற்றுவதைத்   தடுப்பதற்காகக்  கொண்டுவரப்படவிருந்த   சட்டத்  திருத்தத்தை  புத்ரா  ஜெயா   மீட்டுக்கொண்டிருக்கிறது.

சட்டத்   திருத்த (திருமணம்  மற்றும்   மணவிலக்கு)ச்   சட்டம்  1976-க்குக்  கொண்டுவரப்படும்    திருத்தத்திலிருந்து   பகுதி   88ஏ   நீக்கப்படுவதாக   நடப்பில்   சட்ட  அமைச்சர்   அஸலினா   ஒத்மான்   கூறினார்.

பகுதி  88ஏ  கூறுவதாவது:  மணம்  புரிந்துகொண்ட   இருவரில்   ஒருவர்  இஸ்லாத்துக்கு   மாறினால்,  அவர்களுக்குப்  பிறந்த  குழந்தை    மதமாற்றத்துக்கு  முன்னர்   அவர்கள்   எந்த  மதத்தைச்  சார்ந்தவர்களாக   இருந்தார்களோ   அந்த  மதத்தைச்     சார்ந்ததாகத்தான்   இருக்கும். இருவரின்  விருப்பத்தின்பேரில்தான்    அதை  மதமாற்றம்    செய்ய  முடியும்.  பிள்ளைக்கு  18வயதென்றால்    அதன்  விருப்பத்துக்கும்   மதிப்பளிக்க    வேண்டும்.

இப்பகுதி   நீக்கப்பட்ட  நிலையில்   நாளை   சட்டத்   திருத்தச்   சட்டத்துக்கு    புதிய    திருத்த   மசோதா   கொண்டு  வரப்படும்   என   அஸலினா    தெரிவித்தார்.

இச்சட்டத்    திருத்தம்   பல  இனங்களையும்   சமயங்களையும்   கொண்ட   மலேசிய   சமுதாயத்தில்    நல்லிணக்கத்தைக்  காக்கும்    நோக்கில்   கொண்டுவரப்படுவதாக    அஸலினா   கூறினார்.

“அந்த  அடிப்படையில்   அனைவரும்    சட்ட  முன்வரைவுக்கு   ஆதரவளிக்க   வேண்டும்.  அதை    அரசியல்  விவகாரமாக்கக்கூடாது”,  என்றவர்   கேட்டுக்கொண்டார்.