ஈராக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் ஜேர்மன் மாணவி

isis-latest-german-girlஈராக்கின் மொசூல் நகரில் இருந்து மீட்கப்பட்ட ஜேர்மன் மாணவி தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சி ஒன்றில் 16 வயதேயான Linda Wenzel ஈராக்கிய ராணுவ வீரர்களால் மறைவிடத்தில் இருந்து தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறார்.

அவரது இடது தொடைப்பகுதியில் ஆழமான குண்டு காயம் ஏற்பட்டிருப்பதால் அதன் வலி தாங்க முடியாமல் அந்த இளம்பெண் கதறுகிறார்.

ஐ.எஸ் படைகளுடன் இணைந்த பின்னர் தனது பெயரை மரியம் என மாற்றிக்கொண்ட லிண்டா, ஈராக்கிய ராணுவத்தால் கடந்த யூலை மாதம் மீட்கப்பட்ட பின்னர், தற்போது அங்குள்ள சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மிக விரைவில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் எனவும் ஈராக்கிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் ஜேர்மன் அரசு முயற்சித்தால் லிண்டா Wenzel மரண தண்டனையில் இருந்து தப்பலாம் எனவும் தங்களது நாட்டுக்கு அவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இது ஈராக்கிய அரசு ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகமே என்ற போதிலும், ஜேர்மன் அரசின் முயற்சிக்கு கண்டிப்பாக பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இணையம் வழியாக ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட Linda Wenzel கடந்த ஆண்டு துருக்கி வழியாக ஈராக்கில் நுழைந்துள்ளார்.

பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய அவர் செச்சினியா நாட்டவரான ஐ.எஸ் பயங்கரவாதியை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அந்த நபர் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக மொசூல் நகரத்தில் வைத்து Linda Wenzel உடன் தொடர்பு கொண்ட ஜேர்மனி ஊடகத்திடம் தாம் நாடு திரும்ப ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com