பீ என்ன ஊழல் செய்தார்? குவான் எங் எம்ஏசிசியைக் கேட்கிறார்

பீ - லிம்பீ பூன் போ என்ன ஊழல் செய்தார் என தங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென லிம் குவான் எங் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைக் (எம்ஏசிசி) கேட்டுக்கொண்டார்.

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், “மறைக்க அல்லது தப்பிக்க எதுவும்” இல்லாததால், அவரின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எம்ஏசிசி-யின் விசாரணைக்குத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, பினாங்கு சமூக நலன், சுற்றுச் சூழல் மற்றும் பரிவுமிக்க மக்கள் குழுத் தலைவர் பீ, எம்ஏசிசி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதன் காரணம் என்னவென்று தமக்கு இன்னும் தெரியவில்லை எனவும் லிம் தெரிவித்தார்.

“வழக்கின் உண்மைகளை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அரசாங்க கொள்கைகள் குறித்து தெரிவிக்க, உள்ளூர் அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்புவது அதிகார துஸ்பிரயோகமாகக் கருதப்படுமா?”, என லிம் கேள்வி எழுப்பினார்.

இன்று காலை, ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பீ பூன் போவுக்கு 5 நாள்கள் தடுப்புக் காவல் விதித்துPheeboonarrested தீர்ப்பளித்தது.

“சட்டத்தை மீறி அமைக்கப்பட்ட கோவில் அல்லது வணிக வளாகத்தை, சரியான தீர்வு காணப்படும்வரை உடைக்க வேண்டாம் என, உள்ளூர் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வது இலஞ்ச ஊழல் எனக் கருதப்படுமா?”, என்று அவர் மேலும் கேட்டார்.

அதிகாரத் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ், பீ கைதானதைத் தொடர்ந்து, இன்னும் அதிகமானோர் கைது செய்யப்படலாம் என எம்ஏசிசி துணை ஆணையாளர் அஷாம் பாக்கி கூறியது தொடர்பாக கருத்துரைக்கையில் லிம் இவ்வாறு கூறினார்.

கடந்த 15 ஆண்டுகளாக, சுங்கை லெம்புவில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஒரு தொழிற்சாலைக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த சொல்லி, செப்ராங் பிறை மாநகர் மன்ற அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியதாக பீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவரைத் தொடர்ந்து, அத்தொழிற்சாலையின் இயக்குநர் எட்மன் கான் இயு லியோங் மற்றும் அவரது தந்தை, கான் பக் மீ ஆகியோருக்கும் 5 நாள்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.