எந்தவொரு சூழ்நிலையிலும் ஆதரவளிக்கமாட்டோம்! சுமந்திரன் உறுதி

sumandran-mpஎந்தவொரு சூழ்நிலையிலும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளை நேரடியாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது, மற்றும் ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளையும் கலைத்து, தேர்தலை நடத்துவது தொடர்பான 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினை அரசாங்கம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இந்த திருத்த யோசனை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,

ஏனைய கட்சிகளின் ஒப்புதலுடன், இந்த சட்டவரைவை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவாக நிச்சயம் வாக்களிக்கும்.

இதேவேளை, இந்த சட்டவரைவு தொடர்பாக குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியல் கட்சிகளுடன் தீவிரமான கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம், இலங்கை அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால், மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்காக மாத்திரமே இந்த சட்டத் திருத்த வரைவைக் கொண்டு வருவதை ஏற்க முடியாது.

எனினும், மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை எதனையும் நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும், அரசாங்கம் கொண்டுவரும் இந்த திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமாயின், 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 -tamilwin.com
TAGS: