ஜொஹாரி : ஜி.எஸ்.தி. நிலைத்திருக்கும், குறைபாடுகள் சரி செய்யப்படும்

Johari-Abdul-Ghani_gst_new_600கடந்த 2015-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருள், சேவை வரி (ஜி.எஸ்.தி.), இன்னும் திறமையான முறையில் செயல்பட, அதன் பலவீனங்களை அரசாங்கம் மேம்படுத்தும், என 2-ஆம் நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார்.

ஜி.எஸ்.தி. செலுத்துவதைத் தவிர்க்க முயலும் வியாபாரிகளைக் கண்டறிந்து, அமலாக்க அம்சங்களை இறுக்கமாக்குவதும் முன்மொழியப்பட்ட மேம்பாடுகளில் ஒன்று என அவர் தெரிவித்தார்.

“நாங்கள் இத்திட்டத்தை மாற்றமாட்டோம். ஆனால், அரசாங்கத்துக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் நன்மையளிக்கும் வகையில், இன்னும் சிறப்பானதாக விளங்க, அதன் அமலாக்கத்தில் பல மேம்பாடுகளைச் செய்வோம்.”

“ஜி.எஸ்.தி. செலுத்துவதில் நாம் ஒரு முழுமையான அமலாக்கப் பணிகளைச் செய்ய வேண்டும். ஏனென்றால், சில வணிகர்கள்  வரிப்பணம் செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இது வரி செலுத்தும் பிற வர்த்தகர்களுக்கும் பொது மக்களுக்கும் நியாயமானது அல்ல,” என, இன்று லெம்பா பந்தாய் அம்னோ பேராளர் மாநாட்டைத் திறந்து வைத்து பேசுகையில் அவர் தெரிவித்தார்.

14-வது பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற, ‘ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.தி. அகற்றப்படும்’ என ஜி.எஸ்.தி.-யை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் எதிர்க்கட்சியின் செயல் குறித்து கருத்துரைக்கையில் ஜொஹாரி இவ்வாறு கூறினார் என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.