நாடு ஒரு சமூகப் போராளியை இழந்தது!

Taslim bwடத்தோ ஹஜி  தஸ்லிம் என பலரால் அழைக்கப்படும், 68 வயதுடைய  ஹஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்களின் மறைவு  சமூகத்திற்கு  ஒரு மாபெரும் இழப்பாகும். தலையில் ஒரு சொங்கோவையும் கையில் ஒரு தடியையும் வைத்துக்கொண்டு, ஊடுருவும் விழிகளுடன் நடமாடிய இவரின் பிரிவு சமூகப் போரட்ட களத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

தனது வாழ்வின் பெரும் பகுதியை மக்களின் வாழ்க்கையோடு இணைத்து வாழ்ந்தவர். அநீதிகளையும் அநியாயங்களையும் மனத்தெம்புடன் தட்டிக்கேட்டவர். ஆழமாக சிந்திக்க வேண்டும் என்பதைவிட அடிப்படையாக செயல்பட வேண்டும் என  துடிப்பவர். அதனால்தான் அவரால் உடனுக்குடனான  கருத்து பரிமாற்றத்தை கையாள முடிந்தது. அவ்வகையில் செயல்பட தேவையான அடிப்படை தெளிவை அவர் பெற்றிருந்தார்.

தமிழ்மொழி, தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி இப்படி தமிழுக்காகவும் வாழ்ந்த ஒரு விநோத மனிதர் தஸ்லிம். இண்டர்லோக் நாவலுக்கு எதிரான இவரின் பங்கு மிகவும் உணர்ச்சிகரமானது. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்ற வள்ளுவரின் வாக்கை இவர் இழுக்கு என்பதே துணிவற்றதைத்தான் வள்ளுவர் சொன்னார் என்றவர். நியாட் என்ற அமைப்பின் வழி விடாமுயற்சியால் அந்த நாவலுக்கான தடையைப்  பெருவதில் முழுமையான பங்கையாற்றிவர் தஸ்லிம். 2009-இல் மலாய பல்கலைக்கழத்தின் இந்திய ஆய்வியல் துறையில் தமிழர் அல்லாதோர் அதன் தலைவராக  மாற்றம் காணும் நிலை வந்த போது அதன் எதிர்ப்புக்கு முன்நின்றவர்களில் ஒருவராவார்.

பிபிஎஸ்எம்ஐ என்ற ஆங்கிலத்தில் அறிவியல் கணிதம் போதிக்கும் கொள்கையை எதிர்த்தார். அதோடு அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள இரு மொழித் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தாக அமையும் என்ற எண்ணத்தை வெளிப்படுதியதோடு, அப்துல் கலாம் அவர்களின் நிலையை அடிக்கடி உதாரணம் காட்டி, தமிழ்மொழியின் ஆற்றலை அறியாதவர்களின் அறியாமையை எண்ணி வருத்தம் தெரிவித்தவர்.

இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இராணுவத் தாக்குதலால்  பாதிக்கப்பட்ட போது, மலேசிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை என்பதை வெளிப்படையாக நாடளுமன்ற உறுப்பினர்களுடனான    விவாதங்களில் கலந்து கொண்டு கருத்துரைத்தார்.

பெர்சே என்ற தூய தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் தொடர்ந்து செயல்பட்டு வந்தவர். அதன் பேரணிகளில் தவறாமல் கலந்து கொண்டவர். பெரும்பாலான கல்வி, சமூக அரசியல் விவாதங்களில் ஆக்கரமாகக் கலந்து கொண்டு துணிவுடன் கருத்து பரிமாற்றம் செய்தவர் இந்தக் கர்ம வீரர் தஸ்லிம்.

அவரின் பிரிவு நாட்டுக்கும் நமக்கும் ஒரு மாபெரும் இழப்பாகும். வளமான நாடு சீராகவும் சிறப்பாகவும் இருந்தால் அனைவரும் செழிப்புடன் வாழலாம் என்ற பொதுநலம் கலந்த போரட்ட உணர்வுடன் செயல்பட்ட ஒரு சமூகப் போராளியை நாடு இழந்து விட்டது.

அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

– செம்பருத்தி குடும்பத்தினர்.