குவான் எங் மன்னிப்பு கோர எம்எசிசி 48 மணி நேர அவகாசம் கொடுத்துள்ளது

Limgiven48hoursமலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மன்னிப்பு கோருவதற்கு அவருக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்துள்ளது. மன்னிப்பு கோரத் தவறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது மேலும் கூறியது.

நேற்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவை “சட்ட விரோதாமாக” எம்எசிசி கைது செய்தது என்று குவான் எங் அதன் மீது குற்றம் சுமத்தினார்.

“சட்ட விரோதமாக கைது செய்தது” என்று கூறப்பட்டதை எம்எசிசி கடுமையாகக் கருதுகிறது. அது எம்எசிசியின் பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டிருக்கிறது என்று எம்எசிசி இன்று மாலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது.

ஆகஸ்ட் 10 இல் பீ கைது செய்யப்பட்டார். எம்எசிசி அவரை ஆகஸ்ட் 12 லிருந்து ஐந்து நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், பினாங்கு உயர்நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.

பீ யை விடுவிக்க உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் அவர் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்று கூறப்படவில்லை என்று எம்எசிசி கூறியதோடு அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதால், அது குறித்து தெரிவிக்கப்படும் எந்தக் கருத்தும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று அது மேலும் கூறிற்று.