மக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’!

V David‘ஞாயிறு’ நக்கீரன் மக்கள் தொண்டாற்றிய தலைவர்கள், மக்கள் மனதினின்று என்றும் நீங்குவ தில்லை. அதற்கு சரியான சான்று ‘மக்கள் தொண்டன்’ டேவிட் என்றால் அதில் மிகையிராது. தொழிற்சங்கவாதியாக தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்ததால், மலேசிய அரசியலில் டேவிட் கடைசிவரை எதிரணியிலேயே மையம் கொண்டிருந்தார்.

அரசியல் எல்லையைக் கடந்து அனைத்துத் தொழிலாளர்களின் நலனுக்காக மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஓங்கி முழங்கிய டேவிட்டை, மலேசிய நாடாளுமன்றத்திற்கு இரு தவணைகளுக்கு தேர்ந்தெடுத்த பங்சார், டாமன்சாரா தொகுதி மக்கள் பாராட்டிற்குரியவர்கள்.

சிலாங்கூர் மாநில தொழிற்சங்கத்தின் அடிப்படை உறுப்பினராகவும் செயலாளராகவும் 1950-களில் செயல்பட்ட டேவிட், பின்னர் மலேசிய தொழிற் சங்கக் காங்கிரசில் பதினாறு ஆண்டுகள் பொதுச் செயலாளராகக் கடமையாற்றினார். அத்துடன் மலேசியப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராகவும் ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றினார். உலகப் போக்கு-வரத்து தொழிற்சங்க நிர்வாகக் குழு உறுப்பிராகவும் சேவை புரிந்த ‘மக்கள் தொண்டன்’, ஜெனிவா, சுவிட்சர்லாந்தில் நடைப்பெற்ற உலகத் தொழிலாளர் மாநாடுகளிலெல்லாம் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்டவர். இதனால் உள்நாட்டில் மட்டுமன்றி உலகத் தொழிற்சங்க மட்டத்திலும் ‘கிங் டேவிட்’ என்று அவர் அறியப்பட்டார்.

துறைமுக நகரான கோலக்கிள்ளானில், பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை(WTI) நிறுவியதில் முக்கியப் பங்காற்றிய டேவிட், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்தவர்.

குறிப்பாக, இந்திய சமுதாயத்திற்காக அதனிலும் குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்திற்காக வாழ்நாளெல்லாம் தம் குரலை உயர்த்திய டேவிட், 1958-இல் அவசர காலச் சட்டத்தின் கீழும் 1964-இல் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்படியும் கைது செய்யப்பட்டார். அரசியல் பணிகளைக் கடந்து, இன-மொழி அடிப்படையிலும் செயலாற்றியவர் டேவிட். 1984-இல் உலகத் தமிழர் மாமன்றத்தைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் பாடாற்றிய இவர், கடைசிவரை உண்மையான மக்கள் தொண்டனாகவே வாழ்ந்தார். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மலேசியவாழ் இந்தியர்களிடம், குறிப்பாக தமிழர்களிடம், இன்னும் குறிப்பாக தொழிலாளத் தோழர்களிடம் மிகுதியான செல்வாக்குடன் திகழந்த தொழிற்சங்கவாதியும் போரட்ட குணம் கொண்ட அரசியல்வாதியுமாகத் திகழ்ந்த ‘மக்கள் தொண்டன்’ டேவிட்டிற்கு கடந்த  ஆகஸ்ட் 26(1932) பிறந்த நாள்.

2005ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 10-ஆம் நாளில் தம் வாழ்க்கைப் பயணத்தை அவர் நிறைவு செய்தாலும் மலேசிய அரசியல் வரலாற்றில், அவரின் புகழும் பெருமையும் என்றும் நிலைத்திருக்கும்.