துங்குவின் நினைவலைகளில் பீட்டர் வேலப்பன்

பீட்டர்     வேலப்பனுக்கு   வயது  82.  இந்த   வயதிலும்   கால்பந்து   பேச்சை   எடுத்துவிட்டால்   துள்ளிக்குதிக்கும்   இளைஞராகி  விடுகிறார்.  முகமெல்லாம்  பூரித்து   விடுகிறது.

ஏன்  பூரிக்காது?   வாழ்நாளைக்  கால்பந்தாட்டத்துக்கே   அர்ப்பணித்தவர்,  12  பிபா  உலகக்  கிண்ணப்   போட்டிகளை   ஏற்பாடு  செய்வதில்   பங்குகொண்டவர்,  230  நாடுகளில்   கால்பந்தாட்டப்  போட்டிகளை    மேற்பார்வை   செய்பவர்.  பிறகு  ஏன்,  பூரித்துப்  போக  மாட்டார்?

1950  இலிருந்து   அவருக்குக்  கிடைத்த   பாராட்டுச்   சான்றிதழ்கள்,  பதக்கங்கள்,  கேடயங்கள்,    அவரது  பணியை   அங்கீகரிக்கும்   கடிதங்கள்,    டியாகோ  மராடோனா  போன்ற   கால்பந்தாட்ட   நட்சத்திரங்களுடன்   அவர்    எடுத்துக்கொண்ட     படங்கள்   என   அவரது   வீடும்  அலுவலகமும்   நிறைந்திருக்கிறது.

“எங்களுடன்  பேசப்  பிடிக்கவில்லை   என்றால்   அவற்றுக்குள்    புகுந்து   ஒளிந்து  கொள்வார்”,  என  வேடிக்கையாகக்  குறிப்பிட்டார்  அந்தப்    பக்கமாக   வந்த    அவரின்  மனைவி.

1972-இல்,  தென்  கொரியாவை   வென்று   ஜெர்மனியின்   ஒலிம்பிக்   போட்டிக்குச்  சென்ற   மலேசியக்  குழுவின்  நிர்வாகியாக   இருந்தவர்   பீட்டர்   வேலப்பன்தான்.

“ஜெர்மன்    கால்பந்துச்    சங்கம்    என்னை    அழைத்து    ஒலிம்பிக்சின்  தொடக்க   ஆட்டத்தில்   மலேசியா   ஜெர்மனிக்கு   எதிராக   ஆடும்   என்று   கூறியதும்   என்னால்   நம்பவே  முடியவில்லை.

“நான்  உடனே  (அப்போது   சிலாங்கூர்  மந்திரி   புசாராக   இருந்த)   ஹருன்  இட்ரிசை   அழைத்து  ‘ஜெர்மனி   மலேசியாவோடு   விளையாடப்  போகிறது.  ஒலிம்பிக்சை   உலகமே  பார்க்கப்போகிறது’   என்றேன்.

“அதற்கு   அவர்,  ‘உனக்கென்ன  பைத்தியமா’   என்று   கேட்டார்.  அவராலும்   நம்ப  முடியவில்லை.  அதன்பிறகு  சென்றோம்.  ஆடினோம்”,  என்று   பீட்டர்   வேலப்பன்  அவரது   வீட்டில்    ‘அந்த   நாள்களை’   மலேசியாகினியிடம்   நினைவு   கூர்ந்தார்.

சிறுவயது   முதலே  வேலப்பனுக்குக்  கால்பந்து   என்றால்   அவ்வளவு  ஈடுபாடு.

நெகிரி    செம்பிலான்,  சிலியாவில்   தன்  தோட்டத்துத்   திடலில்   மணிக்கணக்கான  பந்தை   உதைத்து   விளையாடிக்கொண்டிருப்பார்.

மற்ற   விளையாட்டுகளிலும்   ஈடுபட்டதுண்டு.    மாநிலத்தைப்  பிரதிநிதித்து  பல   விளையாட்டுப்   போட்டிகளில்  கலந்து  கொண்டிருக்கிறார்.

கெனடாவில்  கல்வித்  துறையில்  பட்டம்  பெற்ற   வேலப்பன்,  17  ஆண்டுகள்   இளைஞர்,   கலாச்சாரம்,  விளையாட்டுத்  துறை   அமைச்சில்   பணி புரிந்தார்.  அங்குதான்  மலேசியாவின்   முதலாவது   பிரதமர்    துங்கு   அப்துல்   ரஹ்மானை   நேரில்  பார்க்கும்  வாய்ப்பு    அவருக்குக்  கிடைத்தது.

“துங்குவை   1958-இல்   முதன்முதலாகச்    சந்தித்தேன்.  அப்போது   நான்  மலேசிய  கால்பந்துச்    சங்க   உதவிச்   செயலாளர்.

“ஒரு  தந்தைபோல்   நடந்து  கொண்டார்.  மிகவும்  அடக்கமாக  இருந்தார்.  மரியாதை  கொடுத்தார்.  இதெல்லாம்  என்னை  மிகவும்   கவர்ந்தன”.

மலேசியாவின்  முதலாவது   பிரதமர்   குறித்து   மலேசியர்   பலரும்  தங்கள்  நினைவுகளைப்   பகிர்ந்துகொள்ளும்   தொகுப்பு   நூல்    “Dialog: Thoughts on Tunku’s Timeless Thinking”  என்ற  பெயரில்  உருவாகியுள்ளது.   அதில்  வேலப்பன்  துங்கு   குறித்து   பல    தகவல்களைப்   பகிர்ந்து   கொள்கிறார்.

துங்கு  குறித்துப்  பேசுவதற்கு    வேலப்பன்   சலிப்பதே   இல்லை.  அவரிடம்  இன்றைய   மலேசிய  கால்பந்து   குறித்துக்  கேட்டால்   தலை   தொங்கி   விடுகிறது.

கால்பந்து  பற்றிப்   பேசவே  வருத்தப்படுகிறார்.  “என்  பேச்சு,  மூச்சு   எல்லாமே   கால்பந்துதான்.  என்   வாழ்க்கையே   கால்பந்துக்குத்தான்.  அது   நன்றாகத்தான்   வளர்ந்து   வந்தது.

“இந்த   நாடு   இன  ரீதியில்  ஒன்றுபட்டிருக்க   கால்பந்துதான்  மிகவும்   உதவும்   என்பதுதான்   என்   ஆழமான   நம்பிக்கை.  இதைப்  போல்   மலேசியர்களை  ஒன்றுபடுத்தும்   விளையாட்டு   வேறு   எதுவுமில்லை.

“எப்ஏம்   தலைவர்    விளையாட்டில்   அரசியல்    வேண்டாம்   என்கிறார். ஆனால்,  அது  நடக்காது. ஜோகூர்  பட்டத்திளவரசர்   துங்கு  இஸ்மாயில்   சுல்தான்  இப்ராகிமின்  முயற்சிகள்  பலனளிக்கும்   என்று   நான்  நம்பவில்லை.  எல்லா   நிலைகளிலும்   அரசியல்வாதிகள்   சம்பந்தப்பட்டுள்ளனர்.

“எல்லாரும்  அம்னோ   ஆள்கள்தான். சீனர்கள்,  இந்தியர்கள்   இல்லை.  இது  எல்லாவற்றையும்   மாற்றி   அமைக்க   அவரால்   முடியுமா   என்று    தெரியவில்லை.   எல்லா   இனங்களையும்  உள்ளடக்கும்  உண்மையான   1மலேசியா  கால்பந்துக்   குழுவை  உருவாக்கும்  சவால்மிக்க   பணியில்   அவர்   ஈடுபட்டுள்ளார்.

“இன்றைய   மலேசிய  தேசியக்  குழுவைப்   பாருங்கள்.  சீனர்கள்  இப்போது   விளையாடுவதில்லை.  இந்தியர்   எண்ணிக்கையும்   குறைவு.

“இன்றைய  நம்  கால்பந்து  நிலவரம்   என்னவென்றால்  அடித்தளமில்லாமல்   வெறுமனே  கூரைகளைத்தான்  கட்டிக்கொண்டிருக்கிறோம் .  ஒரு  வீடு   கட்டுவதாக   இருந்தால்   முதலில்     அடித்தளம்  இடுவோம்.  இளைஞர்  முன்னேற்றத்துக்கு  மன்றங்கள்    தேவை.  அப்படிப்பட்ட   மன்றங்கள்  இப்போது   இல்லை.

“நாம்  என்ன  செய்கிறோம்.    முதலில்   கூரையைக்  கட்டுகிறோம்-  தேசிய  கால்பந்துக்  குழுவை.  அது  விழுந்தால்  என்ன   ஆகும்?

“மலேசியாவில்   திறன்கள்  நிறைய   உண்டு.  அதற்குச்  சரியான   வழியில்  இட்டுச்   செல்லத்தான்   தலைமை  இல்லை”,  என   பீட்டர்   வேலப்பன்   கூறினார்.

பிறகு  வேலப்பன்  மீண்டும்   துங்குவின்  நினைவுகளுக்குச்  சென்றார்.    எத்தனையோ  வேலைகளுக்கிடையிலும்  துங்கு   ஆசிய  கால்பந்துச்  சங்கத்தின்   மாதாந்திரக்  கூட்டத்தைக்   கூட்டத்   தவறியதே   இல்லை    என்றாரவர்.

ஆசிய  கால்பந்து   முன்னேற்றத்துக்கு   மிகவும்   பாடுபட்டவர்   துங்கு.  மலேசியாவின்  மெர்டேகா  கால்பந்துப்  போட்டியைத்   தொடங்கியவர்   அவர்.  1957  தொடங்கி  39  ஆண்டுகள்  அப்போட்டி   நடைபெற்றது.  பல   அனைத்துலகக்  குழுக்கள்   அதில்   கலந்துகொண்டன.  அது  போக   16வயதுக்குக்  குறைந்தவர்களுக்கான   ஆட்டங்கள்,  20வயதுக்குக்  குறைந்தவானவர்களுக்கான  ஆட்டங்கள்   போன்றவற்றுக்கும்   ஏற்பாடு   செய்தார்.

மனிதாபிமானம்  மிக்கவர்  துங்கு.  மெர்டேகா   அரங்கம்   கட்டப்பட்டுக்  கொண்டிருந்த  நேரத்தில்    அங்கு   சென்றார்  துங்கு.

அப்போது   ஒரு   பிச்சைக்காரர்   அவரை   அணுகி   “ஒரு   வாரமாக   நான்  சாப்பிடவில்லை”,  என்றார்.  துங்கு  10 ரிங்கிட்டை   அவருக்குக்  கொடுத்தார். அப்பிச்சைக்காரர்,  “என்னிடம்   போட்டுக்கொள்ள    சட்டைகூட   இல்லை”,  என்றார். துங்கு   அவரது   கோட்டைக்  கழட்டி    சட்டையை  அவிழ்க்க  முனைந்தார்.   பிச்சைக்காரர்   அரண்டு  போய்   ஓடி  விட்டார்.

துங்கு  இறைவன்  மலேசியாவுக்கு   அளித்த வரம்.   அவரின்றி  மலேசியா  இன்று  இந்த  நிலையை    எட்டியிருக்க   முடியாது  என்றார்   வேலப்பன்.

“என்னுடைய   பணி நிமித்தம்   நான்  சுமார்  230   நாடுகளுக்குச்   சென்றுள்ளேன்.  மலேசியா  போன்ற   நாட்டைக்  கண்டதில்லை. நம்மிடம்   இயற்கை   வளமிருக்கிறது.  மனித  வளம்  இருக்கிறது. இரண்டும்   சேர்ந்துதான்  இன்றைய  மலேசியா.

“எனினும்,  அரசியல்வாதிகள்  இதை  மதிப்பதில்லை.     தேவையில்லாமல்  இனம்,  சமயம்   பற்றிப்   பேசுகிறார்கள்.   எல்லாருமே  இந்நாட்டுக்குப்  பங்காற்றியுள்ளனர்.  அதனால்தான்  நாடு  முன்னேறி  நாம்  வளமாக  இருக்கிறோம்”,  என்றாரவர்.