‘காலிட்டுக்கு இன்னும் தீர்கப்படாத பணிகள் இருக்கின்றன’- சிட்டிசன் எக்‌ஷக் குரூப்

thomas-fann-khalid-abu-bakar-pastor-1முன்னாள் காவல்துறைத் தலைவர், காலிட் அபு பாக்காருக்குத் ‘தீர்க்கப்படாத பணிகள்’ இன்னும் இருக்கிறது என அரசு சார்பற்ற இயக்கம் ஒன்று கூறியுள்ளது.

பாஸ்தர் ரெய்மண்ட் கோ கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவே இல்லை, எனவே, காலிட்டின் பணி இன்னும் நிறைவுபெறவில்லை என, காணாமல் போனோருக்கான ‘சிட்டிசன் எக்‌ஷன் குரூப்’ (கேஜ்ட்) பேச்சாளர் தோமஸ் ஃபான், எஃப்.எம்.தி.-யின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

முன்னதாக, கோ கடத்தப்பட்டது தொடர்பாக, ஜூன் 25-ல் போலிஸ் வெளியிட்ட தகவல்கள் முரண்பாடாக இருந்ததையும் தோமஸ் ஃபான் சுட்டிக்காட்டினார். அது தொடர்பாக, காலிட் தெளிவாக விளக்கமளிக்க வேண்டுமென, முன்பு ‘கேஜ்ட்’ கேட்டுகொண்டதையும் அவர் நினைவுறுத்தினார்.

கடந்த பிப்ரவரியில், 62 வயது பாஸ்தர் ரெய்மண்ட் கோ, முகமூடி அணிந்திருந்த சிலரால் கடத்தப்பட்டார். சிசிடிவி ஒளிப்பதிவில், 7 வாகனங்களில் வந்த 12 பேரால், கோ கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நன்கு திட்டமிடப்பட்டு, ஒரு நிமிடத்திற்கும் குறைந்த நேரத்தில் கோ கடத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, முஸ்லிம்களை மாற்றும் நடவடிக்கைகளில் கோ ஈடுபட்டார் என்பது தொடர்பாகவும் போலிஸ் விசாரணை செய்வதாக காலிட் கூறியிருந்தார்.

கோவின் மனைவி ஒருமுறை, இந்த வழக்கு விசாரணையின் அண்மைய விவரங்களை ஊடக அறிக்கைகள் வாயிலாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது, போலிஸ் எதனையும் தெரிவிப்பதில்லை என, தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது கணவர் கடத்தப்பட்ட வழக்கைத் தீர்ப்பதை விட, அவர் முஸ்லிம்களை மனமாற்றம் செய்கிறார் எனும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதிலேயே காலிட் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இன்று காலை, புதிய போலிஸ் படைத் தலைவர் ஃபுஷி ஹருனிடம் தனது பணிகளை ஒப்படைத்த போது, தான் சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும், எந்தவொரு பணியும் விடுபடவில்லை எனவும் காலிட் கூறியது குறிப்பிடத்தக்கது.