தேர்தலில் பிஎன் தோற்கும் என்பதை ஒப்புக்கொண்ட சாலே-க்கு கிட் சியாங் நன்றி

dapஎதிர்வரும்  14வது  பொதுத்  தேர்தலில்  பாரிசான்  நேசனல்      தோற்கலாம்   என்பதை  ஒப்புக்கொண்டதற்காக    தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே   சைட்  கெருவாக்-க்குக்கு   டிஏபி   பெருந்  தலைவர்   லிம்  கிட்  சியாங்   நன்றி   தெரிவித்தார்.

“14வது   பொதுத்   தேர்தலில்  அம்னோ/பிஎன்  தோல்விகண்டு   பக்கத்தான்   ஹரபான்   அரசாங்கம்   அமைக்கும்   சாத்தியமிருப்பதை    வெளிப்படையாக   ஒப்புக்கொண்டதற்காக   சாலே-க்கு    நன்றி  நவில்கிறேன்”,என  லிம்   இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

அம்னோ  இப்போது   பெரும்பாலான  மலாய்க்காரர்களின்   ஆதரவை    இழந்து   விட்டது.

அம்னோவுக்கு   1.6 மில்லியன்   அரசு   ஊழியர்களின்   ஆதரவும்    குறைந்து   கொண்டே  வருகிறது.

என்ன    செய்தால்   பக்கத்தான்  ஹரபான்      14வது   பொதுத்   தேர்தலில்   வெற்றிபெறலாம்      என்று   டிஏபி  செய்துள்ள  கணிப்புடன்   சாலே  உடன்படுகிறார்   என்றே  தோன்றுகிறது.

“டிஏபி   தலைவர்கள்  கூறுவதுபோல்  மலாய்  வாக்குகளில்   10-இலிருந்து 15விழுக்காடுவரை   இடம்  மாறுவது   அவர்கள்(ஹரபான்)  புத்ரா  ஜெயாவை   வெற்றிகொள்ள   வழிகோலும்”,  என  சாலே  நேற்று   கூறியிருந்தார்.

எனவே,  டிஏபி   நாட்டை   ஆள்வதை  விரும்பாவிட்டால்   இவ்விசயத்தில்    மலாய்  வாக்காளர்கள்   எச்சரிக்கையாக  இருக்க   வேண்டும்   என்றும்  சாலே  கேட்டுக்கொண்டார்.

டிஏபி,  மலாய்க்காரர்களுக்கு   எதிரி,  இஸ்லாத்துக்கு   எதிரி   என்று   கூறப்படுவதை   மறுதலித்த   லிம்,   பாஸ்   கட்சியின்  முன்னாள்  ஆன்மிகத்  தலைவர்    நிக்   அப்துல்   அசீஸ்   நிக்   மாட்,  அக்கட்சியின்  முன்னாள்    தலைவர்கள்  பாட்சில்   நூர்,   யூசுப்   ராவா   போன்றோர்   டிஏபியுடன்   நட்பு  பாராட்டி   வந்ததே    அதற்குத்   தக்கச்    சான்று    என்றார்.

“அக்குற்றச்சாட்டுகள்  யாவும்    அப்பட்டமான   பொய்கள்,  வீண் பழிப்புரைகள்”,  என்றாரவர்.