ஜாகிர் நாய்க்கின் தற்காப்புக்கு முன்வராத மலாய்க் கட்சிகளுக்கு இப்ராகிம் அலி கண்டனம்

ibrahim aliபெர்காசா   தலைவர்   இப்ராகிம்   அலி,   சர்ச்சைக்குரிய   இந்திய   முஸ்லிம்  சமய    போதகரான   ஜாகிர்  நாய்க்கைத்    தற்காக்க  முன்வராத   பாஸ்,  அம்னோ,  பார்டி   பிரிபூமி  பெர்சத்து   மலேசியா(பெர்சத்து)    ஆகியவற்றைச்   சாடினார்.

மலாய்க்காரர்களைப்   பிரதிநிதிப்பதாகக்    கூறிக்கொள்ளும்   இக்கட்சிகள்    அந்தப்  போதகர்   சார்பாக  குரல்  கொடுக்க   முன்வந்திருக்க   வேண்டும்  என்றார்.

“பாஸ்  அல்லது   அம்னோ  வரும்   என்று   எதிர்பார்த்தேன். நீதிமீது   உண்மையில்  அக்கறை  இருந்தால்  பிகேஆர்   அல்லது   டிஏபிகூட  வரும்   என்று  நினைத்தேன்.

“அவை  எதுவும்   வரவில்லை.  பெர்காசா   மட்டும்   குரல்  கொடுத்துக்  கொண்டிருக்கிறது”,  என   இப்ராகிம்   இன்று   கோலாலும்பூர்   உயர்  நீதிமன்றத்துக்கு   வெளியில்   கூறினார்.

19  தனிப்பட்டவர்கள்  துணைப்  பிரதமர்   அகமட்  ஜாஹிட்  ஹமிடிக்கு   எதிராக  தொடுத்துள்ள   வழக்கில்  ஒரு  இடைவாதியான   பெர்காசா   சார்பில்   இப்ராகிம்  அலி  நீதிமன்றம்  வந்திருந்தார்.

ஜாகிருக்கு   நிரந்தர  வசிப்பிடத்   தகுதி   வழங்கும்  அமைச்சரின்  முடிவை  எதிர்த்து   வழக்கு   தொடுத்துள்ள   அந்த   19  பேரும்,  ஜாகிரைத்   தேசிய   பாதுகாப்புக்கும்   ஒற்றுமைக்கும்   ஒரு  மிரட்டல்   என   அறிவிக்க   வேண்டும்   என்றும்      கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாண்டு  மார்சில்   அந்த  வழக்கைத்   தொடுத்த   19  பேரில்  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி,   கல்வியாளர்   லிம்  டெக்  கீ,   வழக்குரைஞர்   சித்தி  காசிம்  ஆகியோரும்   அடங்குவர்.

ஜாகிர்  நிகழ்வுகளுக்குச்   சென்று  வந்துள்ளதாகக்  கூறிய  பெர்காசா   தலைவர்  அவரது   பேச்சில்  தேசிய  பாதுகாப்பு   அல்லது   ஒற்றுமைக்கு  மிரட்டலாக   எதையும்   கண்டதில்லை   என்றார்.

மேலும்,       ஜாஹிட்  ஹமிடியையும்   மற்றவர்களையும்   பிரதிநிதிக்கும்   சட்டத்துறைத்    தலைவர்   அலுவலகம்    அந்த  வழக்கைத்   தள்ளுபடி   செய்யக்  கோரும்   மனுவை  நேற்று   தாக்கல்   செய்துள்ளதையும்  அவர்  குறை  கூறினார்.

“அதை  முன்பே   செய்திருக்க   வேண்டும்.    வழக்கைப்   பதிவுசெய்த   48  மணி  நேரத்துக்குள்      செய்திருக்க   வேண்டும்”,  என்றாரவர்.