இருமொழித் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது!

DLP JR2மலேசிய அரசாங்கம் மலேசிய தேசியமொழிப்பள்ளிகளுக்காக அறிமுகப்படுத்திய இருமொழித் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் அமலாக்கம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தி வரும் மே 19 இயக்கத்தினர் பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இந்த இருமொழித் திட்டத்தை அப்பள்ளியில் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

அக்கோரிக்கையை பெட்டாலிங் ஜெயா தமிழ்ப்பள்ளி ஏற்றுக்கொள்ளாததைத் தொடர்ந்து மே 19 இயக்கத்தினர் அப்பள்ளிக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு  செய்துள்ளனர் என்று அவ்வியக்கத்தின் வழக்குரைஞர் பாலமுரளி இன்று காலை கோலாலம்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு எதிரான மே 19 இயக்கத்தினரின் வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு எதிரான வழக்கின் வாதிகள்: 1. என். இராஜரெத்தினம் (பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்), 2. செ. செல்வம் (பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவர்), 3. கா. ஆறுமுகம் (மலேசிய இந்திய அரசுசாரா அமைப்புகளின் ஆலோசகர்) மற்றும் ஒரு பெற்றோர் என இவ்வழக்கை பதிவு செய்த வழக்குரைஞர் தினகரன் விளக்கமளித்தார்  .

மேற்கூறப்பட்டவர்கள் தொடுத்துள்ள இவ்வழக்கின் பிரதிவாதிகள்: 1. மு. பஞ்சினியம்மாள் (பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர்), 2. தலைமை இயக்குனர், கல்வி அமைச்சு, மலேசியா, 3. கல்வி அமைச்சர் மலேசியா மற்றும் 4. மலேசிய அரசாங்கம், என்ற தகவலை பாலமுரளி இச்சந்திப்பில் வெளியிட்டார்.

இன்று காலை மணி 11.00 அளவில் தொடங்கிய இச்செய்தியாளர் சந்திப்பில் ஊடகச் செய்தியாளர்களுடன் இதர டிஎல்பி எதிர்ப்பு ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

காப்பார் நாடாளுமன்றன உறுப்பினர் மணிவண்ணனும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

DLP JR1அரசாங்கம் அறிமுகப்பட்டுத்தியுள்ள டிஎல்பி திட்டம் தாய்மொழிப்பள்ளிகளுக்கு (சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளுக்கு) பெரும் நாசம் விளைவிக்ககூடிய திட்டமாகும். மே19 இயக்கத்தினர் டிஎல்பியை எதிர்ப்பதற்கு இது முக்கிய காரணம் என்று கூறிய பாலமுரளி, இந்த நாசகாரத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அவற்றில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் நான்கு அடைவுகளை கட்டாயமாக எட்டியிருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு நிர்ணயம் செய்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அந்த நான்கு அடைவுகளில் ஒன்று, பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது.  “பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதற்கு ஒப்புதலும் ஆதரவும் நல்க வேண்டும்.”

இத்திட்டத்தை அமல்படுத்த  பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை. மாறாக கடுமையாக எதிர்க்கிறது. அதன் தலைவர்  இராஜரெத்தினம் அப்பள்ளிக்கு எதிரான வாதிகளில் ஒருவர் என்று தெரிவித்த பாலமுரளி, அப்பள்ளியின் மேலாளர் வாரியமும் இத்திட்டத்தை எதிர்க்கிறது  என்று அவர் அறிவித்தார்.

இச்செய்தியாளர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூர்த்தி என்பவர், முன்னாள் தலைமை நீதிபதி முகமட் நோர் தாய்மொழிப்பள்ளிகளுக்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியானால் தமிழ்ப்பள்ளி நிலைக்க முடியாமா என்று வினவினார்.

PJ DLP p2இக்கேள்விக்குப் பதிலளித்த வழக்குரைஞர் கா. ஆறுமுகம், அரசமைப்புச் சட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் இருக்க வேண்டும் என  சொல்லப்படவில்லை. செக்சன் 152 (1) மலாய்மொழி தேசியமொழி என்று கூறுகிறது. அதே செக்சனில் மற்ற மொழிகளைப் பயன்படுத்துவதையும் கற்பதையும் எவரும் தடுக்க முடியாது என்று கூறுவதோடு மற்ற இனங்களின் மொழிகளைப் பாதுகாத்து பேணிவளர்க்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளை இச்சட்டம் பாதிக்கக்கூடாது என்று கூறுவதாக அவர் விளக்கினார்.

பெடரல் அரசமைப்புச் சட்டம் தாய்மொழிகளைக் கற்பிக்க, கற்க அனுமதிக்கிறது. மலேசியக் கல்விச் சட்டம் 1996 அதனை உறுதி செய்கிறது என்று  ஆறுமுகம் மேலும் விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கில் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது என்ற இன்னொரு கேள்விக்கு, “போராட்டம் தொடர வேண்டும்”, என்று உரத்த குரலில் பலரும் பதில் அளித்த வேளையில், இந்த வழக்கின் வழி தங்களின் வாதம் இரண்டு வகையாக இருக்கும் என்றார் தினகரன். முதலாவது, இந்தத் திட்டம் ஒரு கொள்கையல்ல எனவே இதன் அமலாக்கம் சட்டத்திற்கு புறம்பானது என்றார். இரண்டாவதாக, இந்த திட்ட அமலாக்கத்தில் உள்ள சீர்கேடுகளாகும்.  இதன் முழுமையான வாதத்தை  நீதிமன்றத்தில்  சமர்பிப்போம் என்றார்.