ஹரபான்: அமெரிக்காவில் முதலீடு செய்யும்படி இபிஎப்-புக்கும் கஜானாவுக்கும் பிரதமர் உத்தரவிடக் கூடாது

harapanபிரதமர்   நஜிப்    அப்துல்    ரசாக்,   அமெரிக்காவில் முதலீடு  செய்யும்படி  ஊழியர்  சேம  நிதி(இபிஎப்)க்கும்  கஜானாவுக்கும்    உத்தரவிட்டிருக்கக்  கூடாது   என்கிறார்  அமனா   வியூக   இயக்குனர்   சுல்கிப்ளி   அஹமட்.

“முதலீட்டாளர்கள்   பெரிதும்  தயக்கம்   காட்டுபவர்கள்.  ஆதாயம்  கிடைப்பது  உறுதி  என்று    தெரிந்தால்தான்   முதலீடு    செய்வார்கள். நஜிப்   தமக்குச்   சாதகமாக   எதையும்   செய்யக்கூடாது.  இபிஎப்,  கஜானா  இரண்டுமே  நிபுணத்துவ  முதலீட்டாளர்களைக்  கொண்ட   அமைப்புகள்.

“மலேசியாவுக்கோ,  கஜானாவுக்கோ,  இபிஎப்-புக்கோ   ஆதாயம்  தராது   என்ற   நிலையில்  அங்கு  முதலீடு   செய்யும்படி   அவற்றுக்கு    நஜிப்   உத்தரவிட்டிருக்கக்  கூடாது”,  என  இன்று  பெட்டாலிங்  ஜெயாவில்  பக்கத்தான்   ஹரபான்   செய்தியாளர்   கூட்டமொன்றில்  சுல்கிப்ளி   கூறினார்.

இதனிடையே  பிகேஆர்  வியூக  இயக்குனர்   சிம்  ட்சே  ட்சின்,  அமெரிக்கப்  பங்குச்   சந்தை   தொடர்ந்து  ஒன்பது   ஆண்டுகளாக   ஏறுமுகமாகவே    இருந்து  வந்துள்ளது   என்பதால்,   அதில்   முதலீடு   செய்வதற்கு   இது    நல்ல   தருணம்  அல்ல    என்றார்.

“நியு  யோர்க்  பங்குச்  சந்தை  மிகவும்  ஏற்றம்பெற்ற  நிலையில்  உள்ளது. எப்போதும்  ஒன்றை   நினைவில்    கொள்ள    வேண்டும்:  முதலீடு  செய்வதாக   இருந்தால்   விலைகள்  குறைவாக   இருக்கும்போது     முதலீடு   செய்ய   வேண்டும்,  உயரும்போது   விற்க   வேண்டும்.  ஆனால்,  இப்போது  விலைகள்  மிக  உயர்ந்துள்ளன.

“மலேசியர்  பலரும்  தங்கள்   கவலையைத்  தெரிவித்துள்ளனர்.   ஏதாவது    நடந்தால்-  அப்படி  எதுவும்  நடக்கக்கூடாது-  அவர்களின்  பணி ஓய்வுப்  பணத்துக்கு   ஆபத்தாகிவிடும்”,  என்றவர்   சொன்னார்.