முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை

saudi womenநாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்ளதாகவும், 2018 ஜூன் மாதத்துக்குள் இது தொடர்பான ஆணை அமல்படுத்தப்படும் என்று செளதி அரேபிய ஊடக முகமை கூறியுள்ளது.

தற்போது செளதி அரேபியாவில் உள்ள சட்டத்தின்படி ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. பொது வெளியில் வாகனம் ஒட்டிச் செல்லும் பெண்கள் கைது செய்யப்படவும், அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தற்போதைய நடைமுறை சட்டத்தால் பல குடும்பங்களும் தங்கள் வீட்டு பெண்கள் பயணம் செய்ய தனியார் ஓட்டுனர்களை பணியில் அமர்த்துகின்றனர்.

செளதியில் உள்ள உரிமைகள் குழுக்கள், பெண்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டுமென கோரி பல ஆண்டுகளாக பிரச்சரம் செய்து வருகின்றனர். நாட்டில் தற்போது அமலில் உள்ள சட்டத்தை மீறி வாகனம் ஒட்டி சென்ற சில பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்ட புதிய ஆணை குறித்து செளதி ஊடகம் முகமை (எஸ்பிஐஏ) கூறுகையில், ”ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரேமாதிரியாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது உள்பட போக்குவரத்து கட்டுப்பாடு விதிகளை மன்னர் ஆணை செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

செளதி அரேபியாவுக்கான அமெரிக்க தூதரான இளவரசர் காலித் பின் சல்மான், மன்னரின் ஆணை குறித்து கூறகையில், ‘இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்’ என்றும், சரியான முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் வாகனம் ஓட்ட பயிற்சி எடுப்பதற்கு தங்கள் வீட்டு ஆண்களின் அனுமதியை பெண்கள் பெற தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பும் எந்த இடத்துக்கும் அவர்கள் வாகனம் ஒட்டிச் செல்லலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள நிலையில், இந்த முடிவை ஐ..நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் வரவேற்றுள்ளார்.

இதே போல இந்த முடிவை சரியான திசையில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்று அமெரிக்க அரசு துறை தெரிவித்துள்ளது.

-BBC_Tamil