பிரான்ஸ் ரயில் நிலையத்தில் கத்தியால் தாக்குதல்; 2 பெண்கள் பலி

தெற்கு பிரான்ஸின் , மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலில் இருவர் இறந்துள்ளதாக , ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

`இருவர் இந்தத் தாக்குதலில், கத்தியால் குத்தப்பட்டு இறந்தனர் ` என்று , அந்த பகுதியில் காவல் அதிகாரி, ஆலிவர் டீ மேசியார்ஸ், ஏ.ஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கத்தியால் பிறர் மீது தாக்குதல் நடத்தியவரை, பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், ஜெர்ரா கோலோங், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைவதாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தேசிய காவல்துறை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ரயில் நிலையத்தில், நிலைமை சரிசெய்யப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது என அந்த டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது.

பெயர் வெளியிடாத காவல் துறை அதிகாரி, பிரான்ஸின் லி மோண்ட் பத்திரிக்கையிடம் பேசுகையில், தாக்குதல் நடத்தியவர், `அல்லாஹப அக்பர்` (கடவுளே உயந்தவர்) என உரக்கத் தெரிவித்ததாகக் கூறினார்.

இறந்த இருவருமே பெண்கள் என்றும், ஒருவர் கழுத்து அறுபட்டும், மற்றொருவர் கத்தியால் குத்தப்பட்டும் இறந்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. -BBC_Tamil