சர்வாதிகார ஆட்சிதான் மாணவர்களைக் கட்சியின் கொடியைப் பிடிக்கச் சொல்லும், மகாதிர் கூறுகிறார்

 

சர்வாதிகார ஆட்சி மட்டும்தான் மாணவர்களைக் கட்சியின் கொடியைப் பிடிக்கவும் கட்சியின் பாட்டை பாடவும் சொல்லும் என்று மகாதிர் முகமட் கூறினார்.

புத்ரா ஜெயா பிரிசிங்ட் 14 (1) தேசியப்பள்ளியில் மாணவர்கள் அம்னோ ஹீடோப் என்று பாடியது மற்றும் கட்சியின் கொடியை அசைத்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

தாம் ஒரு நாட்டிற்குச் சென்றிருந்தாகவும் அந்நாட்டில் மக்கள் கண்டிப்பாக உயர்மட்ட தலைவரை ஆதரிக்க வேண்டும். அந்நாட்டில் சர்வாதிகார ஆட்சி பின்பற்றப்பட்டது என்று அவர் கூறினார்.

சர்வாதிகார ஆட்சியில் தலைவருக்கு துதிபாடும் வழிமுறை உண்டு. அங்கு மக்கள் தலைவரை கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும், அவர் ஒரு கொலைகாரன், ஒரு கொள்ளைக்காரன் மற்றும் ஒரு திருடனாகக்கூட இருக்கலாம் என்றாரவர்.

“அவர்கள் தலைவரை புகழும்படி கேட்பார்கள், தலைவருக்காகப் பாடுவார்கள். அந்தப் பழக்கம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தின்கீழ் மலேசியாவுக்கும் பரவிவிட்டது.

“அதனால்தான் (மாணவர்கள்) குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களிடமே பொய் சொல்லக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதான் சர்வாதிகார ஆட்சி முறை”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

தாம் அம்னோவின் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த 22 ஆண்டுகாலத்தில் இது போன்றவற்றைச் செய்ததே இல்லை என்றார்.

அப்பள்ளியில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியை கூட்டரசுப் பிரதேச அமைச்சு, புத்ரா ஜெயா கல்வி இலாகா, புத்ரா ஜெயா அம்னோ தொகுதியின் கல்விப் பிரிவு மற்றும் இரு அரசுசாரா அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

“அரசாங்கம் ஒரு சார்பாக இருக்கக்கூடாது மற்றும் எந்த அரசியல் கட்சியையும், ஆளுங்கட்சி உட்பட, ஆதரிக்கக்கூடாது. கட்சியின் நலன்களுக்காக நாம் அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது.

“இது தவறு. நமக்கு இப்போது இருப்பது சட்ட ஆளுமையைப் பின்பற்றாத ஓர் அரசாங்கம். அரசாங்கம் அதன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்”, என்றாரவர்.

இப்பள்ளி சம்பந்தப்பட்ட சம்பவம் எதிரணிக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்குகளைப் பெருக்கும் என்று மகாதிர் நம்புகிறார்.

“அவர்கள் திவாலாகி விட்டனர். அவர்களுக்கு வேறு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்கள் பீதியடைந்துள்ளனர், ஆகவே அவர்கள் தவறான அனைத்தையும் செய்கின்றனர், என்றாரவர்.

அவர் புத்ரா ஜெயாவில் போட்டியிடும் சாத்தியம் குறித்து கேட்ட போது, “நான் நிற்கக்கூடும், அவர்களிடம் சொல்லுங்கள் நான் நிற்கக்கூடும் என்று”, என்று பதில் அளித்தார்.

இதற்கு முன்னதாக, மலேசியாகினியுடனான ஒரு நேர்காணலில் தாம் லங்காவியில் போட்டியிடலாம் அல்லது, வற்புறுத்தப்பட்டால், புத்ரா ஜெயாவில் என்று மகாதிர் கூறியிருந்தார்.