மோடி ஓடி செல்லும் வரை நான் விடப்போவது எல்லை! பிரபல நடிகர் ஆவேசம்

தன் மீதான வழக்கை கண்டு பயப்படப் போவதில்லை என்றும், பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து பேசுவேன் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் குடும்பத்தினருடன் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு நல்ல நட்பு உண்டு. கவுரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறுகையில், “கவுரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனத்தை கடைபிடிக்கிறார். அவர் என்னை விட மிகச் சிறந்த நடிகராக உள்ளார். நடிப்புக்காக எனக்கு கிடைத்த விருதுகளை எல்லாம் அவருக்கு கொடுத்திருக்க வேண்டும்” என்றார். பிரகாஷ்ராஜின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மோடியை தரக்குறைவாக விமர்சித்திருப்பதாக கூறி லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை வரும் சனிக்கிழமை (7-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை கண்டு பயப்படப்போவதில்லை என்றும் தொடர்ந்து மோடி பற்றி பேசுவேன் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நான் பிரதமர் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நாட்டின் பெரும்பாலான மக்களால் தேர்வான ஒரு தலைவர். இந்த நாட்டின் குடிமகன் மற்றும் நடிகர் என்ற முறையில் அவருக்கு மாறுபட எனக்கு உரிமை உள்ளது. அவர் கட்சியை சார்ந்தவர் அல்ல. மதச்சார்பற்ற நாட் டின் பிரதிநிதியாக இருப்பவர். ஜனநாயக நாட்டில் அவர் கவுரி கொலை விவகாரத்தில் மவுனமாக இருப்பதை பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் என்னால் அமைதியாக இருக்க இயலவில்லை. நான் ஜனநாயகத்தை நம்புகிறேன்.

இந்த நாட்டில் நடப்பதில் இருந்து நான் பாடம் கற்றுள்ளேன். எனவே எனக்கு எப்போது, எங்கே அவசியம் என்று தோன்றுகிறதோ அப்போது நான் தொடர்ந்து பேசுவேன். என் மனதில் பட்டதை துணிந்து சொல்வேன். எனது கருத்தை வெளியிட உரிமையும், சுதந்திரமும் உள்ளது. நான் இப்படி பேசுவதால் அரசியலுக்கு வரப்போவதாக சிலர் நினைக்கலாம். நான் அரசியலுக்கு வர விரும்பினால் நேரடியாக உங்களிடம் வந்து விடுவேன். எனது விருப்பத்தை உங்களிடம் வெளியிடுவேன். நான் உலக மனிதனாக வாழ விரும்புகிறேன். மனிதனாக செயல்படவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.

-athirvu.com