கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 11 முஸ்லிம்கள் மீதான மரண தண்டனை ரத்து

குஜராத்தில் உள்ள ஒரு நீதி மன்றம், 2002-ல் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 11 முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் இறந்தார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் இந்து மத யாத்ரீகர்கள்.

கோத்ரா தாக்குதல்தான், இந்தியாவில் ஒரு மோசமான கலவரம் நடைபெற காரணமாக அமைந்தது. அந்த கலவரத்தில் ஏறத்தாழ 1000 பேர் இறந்தார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள்.

மேலும் நீதிமன்றம், இருபது பேருக்கு அளிக்கப்பட்டு இருந்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதுபோல, இந்த வழக்கிலிருந்து விடுதலை கோரிய 63 பேரின் மனுவை நிராகரித்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கியமான நான்கு பேரை, 2011-ம் ஆண்டு நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.

மாநில அரசும், ரயில்வே அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், இந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வடமாநிலத்தில் உள்ள அயோத்தியாவிலிருந்து தங்கள் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்த இந்து யாத்ரீகர்களை சுமந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ், முஸ்லிம் கும்பலால் தாக்கப்பட்டது.

அந்த கும்பல், ரயிலை வலுக்கட்டாயமாக நிறுத்தி, அதில் ஒரு பெட்டிக்கு தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது குஜராத் அரசு. அந்த கமிஷன், ரயில் கொளுத்தப்பட்டது ஒரு சதிச் செயல் என்று 2008-ம் ஆண்டு கூறியது.

சபர்மதி சம்பவத்தின் போது குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த, தற்போதைய பிரதமர் நரேந்திர மோதியை, ரயில் எரிப்பு சம்பவங்களுக்கு பிறகு நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்கிலிருந்து விடுவித்தது அந்த விசாரணை கமிஷன்.

நரேந்திர மோதி கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. சில எதிர்க் கட்சியினர், மறைமுகமாக மோதி கலவரக்காரர்களை ஆதரித்தார் என்றும் கூறினர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை விசாரணை கமிஷன் நிராகரித்தது. -BBC_Tamil

TAGS: