ஸ்மார்ட் போனில் கேம் விளையாடி கண் பார்வையை பறிகொடுத்த இளம்பெண்!

 

பெய்ஜிங், சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். முதியவர்கள் மத்தியில் அதிகமாகவும், இளைஞர்கள் மத்தியில் அரிதாகவும் காணப்படும் பிரச்சனை இளம்பெண்ணுக்கு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பேசுகையில், தொடர்ச்சியாக இடைவெளியின்றி செல்போனை பார்த்ததால் இந்த பிரச்சனை நேரிட்டு உள்ளது என கூறிஉள்ளனர்.

நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியதாக கூறிஉள்ளார். வார இறுதி நாட்களில் விடுமுறையின் போது தொடர்ச்சியாக கேம் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார். “விடுமுறை நாட்களில் வேலை இல்லையென்றால் நான் காலை 6 மணிக்கு எழுந்து கேம் விளையாட தொடங்கிவிடுவேன், அவ்வப்போது ஏதாவது சாப்பிடுவேன், மாலை 4 மணிவரையில் கேம்தான் விளையாடுவேன்,” என பாதிக்கப்பட்ட பெண் கூறிஉள்ளார். சில நேரம் இரவு ஒரு மணி வரையிலும் விளையாடுவேன் என குறிப்பிட்டு உள்ளார்.

என்னுடைய பெற்றோர் சாப்பிட அழைத்தாலும் அதனை கேட்காமல் தொடர்ச்சியாக விளையாடுவேன் என குறிப்பிட்டு உள்ளார். அவருடைய கண் பார்வையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார் என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

-dailythanthi.com