ஷாபியின் சகோதரர் ஐந்து நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

 

பார்டி வாரிசான் சாபாவின் தலைவர் முகமட் ஷாபி அப்டாலின் சகோதரர் ஹமிட் அப்டால் ஐந்து நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மஜிஸ்ரேட் ஸ்டெப்னி ஷெரோன் அப்பி இந்த ஐந்து நாள் தடுப்புக்காவலுக்கு உத்தரவிட்டார்.

கோத்தக் கின்னபாலு எம்எசிசி அலுவலகத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேர விசாரணைக்குப் பின்னர், ஹமிட் நேற்றிரவு மணி 9.30 அளவில் கைது செய்யப்பட்டார்.

நேற்று, இரண்டு சாபா அம்னோ இளைஞர் பிரிவு தலைவர்கள், ஜமாவி ஜாபார், அரிப்பின் காசிம் மற்றும் பார்டி வாரிசான் சாபா இளைஞர் பிரிவு தலைவர் முகமட் அஸிஸ் ஜாம்மான் ஆகியோரும் இந்த வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட் வாரிசான் உதவித் தலைவர் பீட்டர் அந்தோனியின் தொடக்க ஐந்து நாள் தடுப்புக்காவல் மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாபாவில் பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் தவறாகப் பயன்பட்டது சம்பந்தமாக இக்கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் 2015 இல் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றங்களின் போது ஷாபி அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு கிராமப்புறம் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சால் மேற்கொள்ளப்படவிருந்தன.