தென்னிந்திய பட உலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை நடிகை ராதிகா ஆப்தே புகார்

மும்பை, சினிமா துறையில் செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக நடிகைகள் பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு, தமிழ் பட உலகிலும் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் தொந்தரவு கொடுத்தவர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை. இந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவும் தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே தமிழில் டோனி, வெற்றிச்செல்வன், கபாலி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பட உலகில் அதிக படங்கள் கைவசம் வைத்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி படங்களில் அவர் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்னிந்திய பட உலகம் பற்றி ராதிகா ஆப்தே கூறியதாவது:-

“தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமைகள் உள்ளன. நான் ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். படம் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தோம். அவர் திடீரென்று என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் அதிர்ச்சியானேன்.

நான் அந்த மாதிரி நிலைமைக்கு போகவில்லை. அப்படிப்பட்டவர்களை உதாசினம் செய்து விட்டேன். அதனால்தான் தென்னிந்திய மொழி படங்களில் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லை என்று கருதுகிறேன்.”

-dailythanthi.com