ரோஹிஞ்சா நெருக்கடி: அர்சா தீவிரவாதிகள் குறித்த உண்மைகளை தேடி ஒரு பயணம்

பிபிசி-யின் தென் கிழக்கு ஆசியாவின் செய்தியாளர் ஜொனாதான் ஹெட், மியான்மரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மியான்மர் ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்த `அர்சா` அமைப்பைச் சேர்ந்தவர்களையும், வங்கதேசத்தில் இருக்கும் அகதிகளையும் சந்தித்து, உரையாடி இருக்கிறார். அங்கிருந்து அவர் வழங்கி இருக்கும் செய்தி.

மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் அவலங்களை எதிர்கொள்ளும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள், விரைவில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுவார்கள். இதுதான் அங்கு நடந்து வரும் விஷயங்களை கூர்ந்து கவனித்து வரும் அனைவரும் கருதும் ஒரு விஷயம்.

ஆகஸ்ட்25-ல் நடந்தது என்ன?

ஆக்ஸ்ட் 25-ஆம் தேதி அதிகாலை, ராணுவ முகாம் மற்றும் 30 போலீஸ் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல், ராணுவத்தின் இரக்கமற்ற ஒரு எதிர் தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது.

ராணுவத்தின் இந்த கருணையற்ற தாக்குதல்தான், ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரோஹிஞ்சாக்கள், வங்கதேசத்திற்கு அகதிகளாக செல்ல காரணமாக அமைந்தது.

அந்த அதிகாலை மியான்மர் ராணுவத்தின் மீது அந்த தாக்குதலை தொடுத்தவர்கள், `அரக்கான் ரோஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி` (அர்சா) என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் ஒரு நிழல் குழு.

நாம் வங்கதேசத்தில் இருக்கும் அகதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் நடத்திய உரையாடல், அர்சா குழுவின் உத்தி மோசமாக வடிவமைக்கப்பட்டு இருப்பது மற்றும் அனைத்து ரோஹிஞ்சாக்களும் அந்தக் குழுவை ஆதரிக்கவில்லை என்பதை உணர்த்தியது.

தென் மாங்தாவில் உள்ள கடற்கரை பிரதேசமான அலெல் தான் கியாவ் உள்ள போலீஸ் முகாம் மீது ஆகஸ்ட் 25-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து, மியான்மர் பாதுகாப்பு படைகள் கொடுத்த தகவல்களும் கூட, அந்த தாக்குதல் சாதாரண தாக்குதல் என்றே கூறுகிறது.

அகலமான கத்திகள் மற்றும் மூங்கில் குச்சிகள் கொண்டு ஓர் ஆண் குழுவால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்றே மியான்மர் ராணுத்தினர் கூறுகின்றனர்.

ஆனால், அதே நேரம், இதுவரை அவர்கள் நிகழ்த்திய தாக்குதலிலேயெ, இதுதான் பெரிய தாக்குதல் ஆகும்.

இந்த தாக்குதல் குறித்து எங்களுக்கு முன்பே தகவல் கிடைத்தது. அதனால் எங்களது உள்ளூர் அதிகாரிகளை முந்தைய நாளே பாதுகாப்பாக ஒரு ராணுவ முகாமில் தங்க வைத்தோம் என்று போலீஸ் லெப்டினன்ட் ஆங் குயாவ் மோய் பின்னர் தன்னை சந்தித்த ஒரு ஊடகவியலாளர் குழுவிடம் கூறினார்.

அதிகாலை நான்கு மணி அளவில், ஏறத்தாழ 500 பேரைக் கொண்ட இரண்டு குழுக்கள் கடற்கரையிலிருந்து தாக்கியதாக அவர் கூறுகிறார்.

இந்த தாக்குதலில், கடற்கரையை ஒட்டி வசித்த ஒரு குடியேற்ற அதிகாரி இறந்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரிகள் அவர்களை நோக்கி சுட்டு இருக்கிறார்கள்

போலீஸின் எதிர் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிய அந்த குழு, தங்களில் இறந்த 17 பேரின் உடலை அங்கேயே விட்டு விட்டு ஓடி இருக்கிறார்கள்.

இந்த கணக்கு எனக்கு வங்கதேசத்தில் உள்ள ஓர் அகதியால் கொடுக்கப்பட்டது.

அகதி உடனான உரையாடல்

வங்க தேசத்தில் உள்ள அந்த அகதியுடன், அவர் எப்படி ரக்கைன் மாகாணத்திலிருந்து துரத்தப்பட்டார் என்பது குறித்து உரையாடினேன்.

அர்சா, தங்கள் கிராமத்தினரை அந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தாக்குதலில் இணைத்துக் கொள்ள முயற்சி செய்ததாகவும், அப்படிஇணையவில்லை என்றால், சுதந்திர ரோஹிஞ்சா மாகாணம் அமையும்போது நாங்கள் இதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்று எங்களை அச்சுறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு அகலமான புதிய கத்திகளை கொடுத்து, அருகில் இருந்த காவல் நிலையத்தை தாக்க கூறினர்.

அர்சாவிடம் அதிகளவில் ஆயுதம் இருந்தது. அவர்கள் எங்கள் கிராமத்தினரிடம் மீண்டும் மீண்டும் பேசினர். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 25 பேர் அவர்கள் சொன்னது போல செய்தனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டுவிட்டனர்.

அர்சாவில் இணைந்த இளைஞர்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அர்சாவில் இணைந்த, இப்போது வங்கதேசத்தில் வசிக்கும், இருபது வயது இளைஞர் ஒருவரை சந்தித்தேன். இவர்தான் அர்சா உள்விவகாரங்கள் குறித்த தகவலை எனக்கு தொடர்ந்து வழங்கி வந்தார்.

அர்சாவின் தலைவர், அடா உல்லாஹ் 2013-ம் ஆண்டு தங்கள் ஊருக்கு வந்தது குறித்தும், அப்போது, இதுதான் ரோஹிஞ்சாக்களை மோசமாக நடத்துபவர்களுக்கு எதிராக சண்டையிடும் நேரம் என்று பேசியது குறித்தும் அந்த இளைஞர் விவரித்தார்.

“உல்லாஹ், இந்த சண்டைக்காக, எங்களது ஒவ்வொரு சமூகத்திடமிருந்தும் 5 முதல் 10 பேர் வரை வேண்டும் என்று கேட்டார்.

அப்படி சென்ற இளைஞர்களை எங்கள் கிராமத்திலிருந்து ஒரு மலை பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கார் இன்ஜின் பிஸ்டனை வைத்து எப்படி நாட்டு வெடிகுண்டுகள் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

எங்கள் கிராமம் இதை ஊக்குவிக்க தொடங்கியது. எங்கள் கிராமத்தினர் பயிற்சியாளர்களுக்கு வழங்குவதற்காக உணவு, மற்றும் பிற பொருட்கள் சேகரித்தனர்.” என்று அந்த இளைஞர் கூறினார்.

அதனை தொடர்ந்து, அவரும் அந்த அர்சாவில் இணைந்து இருக்கிறார்.

பின் அவர்கள், தங்கள் கிராமத்தை மூங்கில் குச்சிகள் மற்றும் ஆயுதங்களுடன் கிராமத்தில் ரோந்து வந்ததாகவும், அனைவரும் பள்ளிவாசலுக்கு செல்கிறார்களா என்பதை உறுதி செய்ததாகவும் கூறிய அந்த இளைஞர் அதே நேரம், தாம் எந்த துப்பாக்கியையும் பார்த்ததில்லை என்கிறார்.

உலகத்தின் கவனத்தை ஈர்க்க

அந்த இளைஞர் மேலும் நம்மிடம், ஆகஸ்ட் 25-ஆம் தேதி தான் துப்பாக்கிச் சுடும் சத்தத்தை கேட்டதாகவும் மற்றும் வீடுகள் தொலைவில் எரிவதை பார்த்ததாகவும் விளக்கினார்.

அந்த சமயத்தில், அவரின் தலைவர், உள்ளூர் அர்சா கமாண்டர், அவரது கிராமத்துக்கு வந்து இருக்கிறார்.

ராணுவம் வந்துகொண்டிருப்பதாகவும், அவர்கள் மக்களை தாக்குவர் என்று கூறி இருக்கிறார்.

“நீங்கள் எப்படியாக இருந்தாலும் சாகத்தான் போகிறீர்கள். அதனால், நீங்கள் முதலில் ராணுவத்தை தாக்குங்கள். ஒரு தியாகியாக மரணியுங்கள் என்று இளைஞர்களிடம் அந்த உள்ளூர் தலைவர் பேசினார்” என்று அந்த இளைஞர் கூறினார்.

மேலும் அவர், “அனைத்து வயதினை சேர்ந்த இளைஞர்களும் கத்தி மற்றும் மூங்கில் குச்சிகளை வைத்திருந்தனர். அவர்கள் முன்னேறி வந்த ராணுவத்தினரை அதனை கொண்டு தாக்கினர். இதில் பலர் இறந்தனர்.”

அதன் பின், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வங்கதேசம் செல்வதற்காக, நெல் வயல்களில் இறங்கி ஓடினர். ஆனால், அப்படி தப்பிப்பதற்காக ஓடியவர்களும், ரக்கைன் பெளத்தர்களால் தாக்கப்பட்டனர்.

எதற்காக இந்த வீண் தாக்குதல். இதன் நோக்கம் என்ன? என்று நான் அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், “நாங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்க்க விரும்பினோம். நாங்கள் பல காலமாக பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம்” என்றார்.

தங்களுக்கும் சர்வதேச ஜிகாதி அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்தார். “நாங்கள், எங்கள் உரிமைக்காக போராடுகிறோம். நாங்கள் எங்களுக்கு தேவையான துப்பாக்கிகளையும், வெடி பொருட்களையும் மியான்மர் ராணுவத்திடமிருந்தே கைப்பற்ற முயற்சிக்கிறோம்.”என்றார்.

சில நூறு முழு நேர தீவிரவாதிகளையும், அநேகமாய் அதில் சில வெளிநாட்டினரையும் கொண்டது அந்த அமைப்பு.

ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த அந்த தாக்குதலில், பல்லாயிரக்கணக்கானவர்கள் எந்த பயிற்சியுமற்ற மற்றும் எந்த ஆயுதங்களுமற்ற பலர் தாக்குதலின் கடைசி நேரத்தில்தான் பங்கெடுத்து இருக்கிறார்கள் என்று அந்த இளைஞர் அளித்த தகவல்களும், பிற தரவுகளும் கூறுகின்றன.

அர்சா வெளியிட்ட வீடியோ

அர்சா அமைப்பு, ரக்கைன் மாகாணத்தில் 2012-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வகுப்புவாத வன்முறைக்கு பிறகு, பாகிஸ்தானில் பிறந்த ரோஹிஞ்சியா முஸ்லிம், அடா உல்லாஹாவினால், தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட் 25-ம் தேதி தாக்குதலுக்குபின், அவர் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில், முகமூடி அணிந்து, ஆயுதமேந்திய சிலர் சுற்றி நிற்க, அவர் மையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அந்த வீடியோவில் ரோஹிஞ்சியர்கள் மீதான தாக்குதலை, அவர் இனப்படுகொலை என்று குறிப்பிட்டார். ரோஹிஞ்சியர்கள் மீதான அந்த தாக்குதலுக்கான பதிலடி இது என்றார்.

மேலும் அவர், அந்த வீடியோ பதிவில், “நாங்கள் பர்மிய ராணுவத்தால், முற்றுகையிடப்பட்டு இருக்கிறோம். எங்களது போராளிகளுக்கு அவர்களை எதிர்த்து சண்டையிடுவதை தவிர வேறு வழியில்லை.” என்றார்

அதில் அவர் சர்வதேச சமூகத்தின் உதவியை கோரி இருந்தார். அரக்கானை (ரக்கைன் மாகாணத்தின் மற்றொரு பெயர்) ரோஹிஞ்சியர்களின் நிலம் என்று வர்ணித்தார்.

அதனை தொடர்ந்து வந்த இன்னொரு அறிக்கையில், ரக்கைன் மாகாணத்தில் உள்ள மற்ற இனக்குழுக்களுடன் அர்சாவுக்கு எந்த சண்டையும் இல்லை என்று கூறி இருந்தார்.

தங்களது போராட்டத்தை, ஜிஹாத் என்று அவர் வர்ணித்துக் கொள்ளவில்லை.

இன தேசியவாத இயக்கம்:

“அடா உல்லாஹ்வும் மற்றும் அவரது செய்தி தொடர்பாளர்களும் தங்களை ஒரு இன – தேசியவாத இயக்கமாக கருதிக் கொள்கின்றனர் என்பதை தெளிவுபடுத்திவிட்டனர்.” என்று பாங்காக்கில் வசிக்கும், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் அண்டனி டேவிஸ் கூறுகிறார்.

மேலும் அவர், “சர்வதேச ஜிஹாதி குழுக்களுடனோ, ஐ.எஸ் அமைப்பு அல்லது அல் கொய்தாவுடனோ, அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள், தங்களது போராட்டத்தை ரக்கைன் மாகாணத்தில் தங்களது உரிமைகளை மீட்கும் போராட்டமாக பார்க்கிறார்கள். அவர்கள் பிரிவினைவாதிகளோ அல்லது ஜிஹாதிகளோ அல்ல.”

ஆனால், மியான்மர் ராணுவம் வெற்றிகரமாக அவர்களை சர்வதேச தீவிரவாத குழுக்களால் ஆதரிக்கப்படும் அமைப்பாக சித்தரித்துவிட்டது. மியான்மரில் ஊடகங்களும் மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்துக்குச் செல்லும் ரோஹிஞ்சியர்கள் குறித்து குறைவான செய்திகளைத்தான் வெளியிட்டு இருக்கின்றன.

மக்கள் தொகை சீரமைப்பு

இந்தப் போரில் ராணுவ தரப்பை ரோஹிஞ்சியா மற்றும் ரக்கைன் பெளத்தர்கள் ஆதரிக்கிறார்கள்.

பர்மியர்களும், ரக்கைன் தேசியவாதிகளும், வங்காள குடியேறிகளால்தான் ரோஹிஞ்சா மக்கள் தொகை செயற்கையாக பெருகியது என்று நம்புகிறார்கள்

இந்த நான்கு வாரங்களில் ரக்கைன் மாகாணத்தைவிட்டு, ரோஹிஞ்சா மக்களை விரட்டியடித்த, ராணுவத்தின் இந்த நடவடிக்கை, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கையாக தோன்றுகிறது.

நம்முடன் தொடர்பில் இருக்கும் அர்சா அமைப்பைச் சேர்ந்தவர், “தான் இன்னும், தமது உள்ளூர் தலைவர் மற்றும் வங்க தேசத்தில் இருக்கும் பிற அர்சா தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதே நேரம் அடா உல்லாஹ்வுடன் தொடர்பு ஏதும் இல்லை” என்றும் கூறினார்.

மேலும் அவர், அடுத்து தமது இயக்கம் என்ன செய்ய போகிறது என்று தமக்கு தெரியாது என்று கூறினார்.

நாம் வங்க முகாமில் பலரிடன் பேசினோம். அவர்கள் அனைவரும் அர்சாவின் இருப்புக் குறித்து அறிந்துள்ளனர். ஆனால், அதே நேரம் பலர் அந்த அமைப்புக் குறித்து அமைதியான குரலில் பேசக் கூட அஞ்சினர்.

மியான்மர் ராணுவத்துக்கு தகவலை அளித்த பல ரோஹிஞ்சாக்கள் அர்சா அமைப்பினால் கொல்லப்பட்டு இருந்தாலும், 1950-க்கு பிறகு மியான்மர் ராணுவத்தை தாக்கிய அமைப்பு என்பதால், அந்த அமைப்பு குறித்த வியப்பு ரோஹிஞ்சாக்களிடையே பரவலாக இருக்கதான் செய்கிறது. -BBC_Tamil