எல்லாவற்றையும் சொல்லிவிடுவோம், காலிட், எச்சரிக்கிறார் தெங்

 

14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன் சிலாங்கூர் பாரிசான் நேசனல் அம்மாநிலத்தின் நான்கு முன்னாள் மந்திரி பெசார்களை, குறிப்பாக காலிட் இப்ராகிம்மை, பயன்படுத்தவிருக்கிறது.

நாளை, ஞாயிற்றுக்கிழமை, காலிட் இப்ராகிம் 14 ஆவது பொதுத் தேர்தலில் அவரது நிலைப்பாடு குறித்து அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

பிஎன் காலிட்டை பயன்படுத்தி சிலாங்கூர் மாநில நிருவாகத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தலாம் என்ற போதிலும், காலிட் மந்திரி பெசாராக இருந்த போது அவருடைய ஆட்சி முறையின் பாணி மற்றும் அவரது தனிப்பட்ட பலவீனங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்த ஹரப்பான் தயங்காது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் கூறினார்.

காலிட் மற்றும் அவரது முன்னோடிகளான முகமட் கிர் தோயோ, அபு ஹசான் ஒமார் மற்றும் முகம்மட் முகம்மட் தாயிப் ஆகியோர் நேர்மையான முறையில் பதவியிலிருந்து விலகவில்லை என்றாரவர்.

காலிட் கட்டாயத்தின் பேரில் பதவி துறந்தார். நாங்கள் ஒருவரையொருவர் மதித்தோம். அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் அளவிற்கு நாங்கள் செல்லவில்லை என்று தெங் கூறினார்.

“ஆனால், காலிட் அந்தப் பக்கம் போக விரும்பினால், நாங்கள் அவருடையப் பலவீனங்களை வெளியிடுவோம்.. உண்மையில், அவர் மந்திரி பெசாராக இருந்த போது உண்டாக்கிய குழப்பங்களைச் சீர்செய்யும் கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம்”, என்று தெங் மேலும் கூறினார்.