பிரச்சனைக்குரிய கிர்குக் நகருக்குள் நுழைந்தது இராக்கிய படை

இராக்கில் பிரச்சனைக்குரிய நகரமான கிர்குக்கிலுள்ள மத்திய பகுதிக்கு இராக்கிய அரசு படைகள் நுழைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். கிர்குக் நகரத்தின் வெளியே உள்ள முக்கிய மையங்களை குர்து படையினரிடம் இருந்து இராக் படைகள் கைப்பற்றியுள்ளது.

கே 1 ராணுவ தளத்தையும், பாபா குர்குர் எண்ணெய் மற்றும் எரிவாயு வயலையும், குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் அலுவலகங்களையும் இராக் படைகள் கைப்பற்றியுள்ளதாக இராக் ராணுவத்தின் அறிக்கை கூறியுள்ளது.

மாகாண அரசின் கட்டடத்திற்குள், மத்திய படைகள் நுழைந்ததை பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

கிர்குக்கின் தெற்கு பகுதியில் மோதல் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

குர்திஸ்தான் பகுதியை சுதந்திர நாடாக ஆக்க, குர்திஸ்தான் பிராந்தியம் சர்ச்சைக்குறிய கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்திய மூன்று வாரத்திற்கு பிறகு இது நடந்துள்ளது.

கிர்குக் உள்ளிட்ட குர்து மக்கள் வசிக்கும் பகுதிகள், குர்திஸ்தான் பிரிவதற்கு அமோக ஆதரவு அளித்த நிலையில், இந்த வாக்கெடுப்பை அரசியலமைப்பிற்கு விரோதமானது என இராக் பிரதமர் கூறியுள்ளார்.

-BBC_Tamil