புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பயணத்துக்கு 100 வீத ஆதரவு: சம்பந்தன்

புதிய அரசியலமைப்பினை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் பயணத்துக்கு 100 வீத ஆதரவினை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் தேசிய தீபாவளி விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லை. இது புனித பயணமாகும். இந்த பயணத்தில் அவர்கள் இருவரும் வெற்றிகாண வேண்டும்.

இவ்வருட திபாவளி நிகழ்வை விடவும் அடுத்த வருடம் திபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில் மகிழ்ச்சியுடன் நடைபெறும் என இவ்வடத்தில் நான் கூற விரும்புகின்றேன்.

பிளவுப்படாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து இனத்தவர்களும் சமஉரிமையுடன் வாழும் வகையில் அந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலமாக நாங்கள் எல்லோரும் ஒரு நாட்டு மக்களாக வாழ முடியும். அத்துடன் நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறி கொள்வதற்கு நாம் விரும்புகின்றோம். எமது மக்களும் அதனை விரும்புகின்றனர்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: