“பூகிஸ்” என்று கூறியதற்காக மகாதிருக்கு எதிராக எதிர்ப்பு

தீவகற்ப மலேசியாவில் பூகிஸ் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் ஒரு கூட்டத்தினர் அச்சமூகத்தை மகாதிர் அவமதித்து விட்டார் என்று இன்று அவருக்கு எதிராக ஒரு சிறு எதிர்ப்பை அவரின் புத்ரா ஜெயா அலுவலகத்தின்முன் நடத்தினர்.

பெர்னாமா தகவல்படி, சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்த அச்சிறு கூட்டம் மகாதிர் அச்சமூகத்தை கடற்கொள்ளையுடன் தொடர்புபடுத்திக் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.

மகாதிர் அவரது கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோராவிட்டால் அவருக்கு எதிராக நாடுதழுவிய அளவில் போலீஸ் புகார் செய்யப்படும் என்று அக்கூட்டத்தினர் தெரிவித்தனர்.

இந்த இனவாத அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாததாகும். முழு பூகிஸ் சமூகமும் அவருக்கும் அவரது கட்சிக்கும் வேண்டிய நேரத்தில் (தேர்தல்) ஆதரவளிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று அவர்களின் பேச்சாளர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை, ஹரப்பான் கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்புப் பேரணியில் நஜிப்பின் பூகிஸ் பின்னணியைப் பற்றி மகாதிர் கூறியிருந்ததை அக்குழுவினர் சுட்டிக் காட்டினர்.