லகாட் டத்து மாநில சட்டமன்ற உறுப்பினர் தடுத்து வைக்கப்பட்டார்

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) விசாரணைக்கு உதவுவதற்காக லகாட் டத்து சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் யூசுப் அப்டால் நான்கு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யூசுப், பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டாலின் சகோதரர், நேற்று எம்எசிசியின் கோட்டா கின்னபாலு அலுவலகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யூசுப், ஷாபியின் இரண்டாவது உடன்பிறப்பு. ஹமிட் அப்டாலும்கூட கடந்த வாரம் எம்எசிசியால் கைது செய்யப்பட்டார்.

மஜிஸ்டிரேட் ஸ்டெப்னி ஷெர்ரின் எம்எசிசி சட்டம் 2009 இன்கீழ் யூசுப்பின் தடுப்புக்காவலுக்கு உத்தரவிட்டார் என்று உத்துசான் மலேசியா கூறுகிறது.

சபாவின் கிராமப்புற மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து குறைந்தபட்சம் ரிம1.5 பில்லியன் தவறாகப்பயன்படுத்தப்பட்டது சம்பந்தமாக இக்கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் சம்பந்தமாக எம்எசிசி இதுவரையில் 45 பேரை விசாரித்துள்ளது.