குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக்

முன்பு குர்திஷ் படைகள் வசம் இருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இராக் அரசப் படைகள் கூறியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்புதான் குர்து இன மக்கள் இராக்கில் இருந்து குர்திஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கான கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தினர்.

நினுவா மாகாணத்தில் உள்ள மொசூல் அணை உள்ளிட்ட பகுதிகளை இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் அமைப்பினருடன், இராக் அரசுக்கு ஆதரவாக மேற்கொண்ட மோதலின்போது கடந்த மூன்று ஆண்டுகளில் அப்பகுதிகளை குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள் கைப்பற்றினர்.

குர்திஸ்தான் பிராந்தியத்தின் தலைவர் மசூத் பர்சானி அமைதிக்கு அழைப்பு விடுத்ததுடன், குர்திஸ்தான் சுதந்திரத்திற்காக தொடர்ந்து பாடுபடப்போவதாகவும் கூறினார்.

கிர்குக் நகரம் அமைதியாக இருந்தாலும், குர்திஷ் மக்கள் வாழும் பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகள் மூடப்பட்டு ஆள் அரவமற்று காட்சியளித்தது. இராக்கிய படைகள் தங்கள் பகுதிகளைக் கைப்பற்ற முன்னேறி வருவதை அறிந்து அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.

குர்திஷ் பெஷ்மெர்கா போராளிக் குழுவினர் தங்களைப் பாதுகாக்கவில்லை என்று சிலர் அக்குழு மீது கோபமாக உள்ளனர். வேறு சிலரோ, கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி இராக்கின் ராணுவ நடவடிக்கைக்கு வித்திட்டதாக மசூத் பர்சானி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

எண்ணெய் வளம் மிக்க கிர்குக் மாகாணம் அதிகாரபூர்வ குர்திஸ்தான் பகுதிக்கு வெளியில் அமைந்திருந்தாலும், அப்பகுதிக்கு இராக் மத்திய அரசு, குர்திஸ்தான் பிராந்திய அரசு ஆகிய இரண்டுமே உரிமை கொண்டாடுகின்றன. அம்மாகாணத்தில் குர்திஷ் இன மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், அரேபிய மற்றும் துருக்கி இன மக்களும் அங்கு அதிக அளவில் வாழ்கின்றனர்.

செவ்வாயன்று பை ஹசான் மற்றும் அவானா எண்ணெய் கிணறுகளை அரச படைகள் கைப்பற்றின. அதற்கும் முன்னதாக திங்களன்று, கிர்குக் பகுதியில் உள்ள முக்கிய ராணுவ தளங்கள் மற்றும் அங்குள்ள ஆளுநர் அலுவலகத்தையும் கைப்பற்றின.

அங்கு இராக் தேசிய கொடியுடன் பறந்துகொண்டிருந்த குர்திஸ்தான் பிராந்தியத்தின் கொடியை அப்படைகள் அகற்றியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குர்திஷ் பெஷ்மெர்கா படையினர் டியாலா மற்றும் நினுவா மாகாணங்களில் இருந்து பின்வாங்கியுள்ளதாக இராக் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசு அமைப்பினரிடம் இருந்து குர்திஷ் படையினர் 2014-இல் கைப்பற்றிய, நினுவா மாகாணத்தில் உள்ள சிஞ்சார் நகரம், அதற்கு முன்பு வரை ஐ.எஸ் அமைப்பினர் யாசிடி சிறுபான்மையனரை கொல்லவும், அவர்களின் பெண்கள் உள்ளிட்டவர்களை அடிமைப்படுத்துவதற்குமான இடமாக இருந்தது. -BBC_Tamil