யதார்த்தத்தை புரிந்து செயற்படுங்கள் – வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு புதுடெல்லியில் அறிவுரை

வடக்கு மாகாணசபை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும் என்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வலுவூட்டல் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு கடந்தவாரம் புதுடெல்லியில் இடம்பெற்றிருந்தது.

புதுடெல்லியில் உள்ள ஓ.பி.ஜின்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் அரச மற்றும் பொது கொள்கை வகுப்பு கல்லூரியினால், ஒரு வார காலம் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கிற்கு, அவுஸ்ரேலியா நிதிப்பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், ஆசிய மன்றம் இதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது.

வடக்கு மாகாணசபையின் 14 உறுப்பினர்களும், ஐந்து அதிகாரிகளும் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில், சிறிலங்கா விவகாரங்களுடன் தொடர்புடைய மற்றும் அதனை உன்னிப்பதாக அவதானித்து வரும் இந்தியாவின் இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர்.

ஊடகவியலாளர் எம்.கே.நாராயணசாமி, முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலரும், சிறிலங்காவில் இந்திய தூதுவராகப் பணியாற்றியவருமான  நிருபமா ராவ், கலாநிதி சி.ராஜ்குமார், கலாநிதி ஆர்.சுதர்சன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.சுதர்சன நாச்சியப்பன், கலாநிதி மோகன்குமார், மேலும் பலர் இந்த வலுவூட்டல் கருத்தரங்கில் விரிவுரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இனசமத்துவம், அதிகாரப் பகிர்வு, சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், தேசிய பாதுகாப்பு, சிறிலங்கா இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடுகள், தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வடமாகாணசபை ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில், தற்கால புவிசார் அரசியல் சூழலில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக பங்களிப்புக்கு வாய்ப்புகள் இல்லை என்றும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றிருந்த வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தகவல் வெளியிடுகையில்,

“சிறிலங்காவில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சவால்களை வென்றெடுப்பதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்களிப்பை சமகால பூகோள அரசியலில் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்பதை,  இந்தப் பயணத்தின்போது உணரக் கூடியதாக இருந்தது.

வலுவூட்டல் கருத்தரங்கில்  உரையாற்றியவர்கள்,  யதார்த்தத்தை உணர்ந்து அதன் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டுமென்ற கருத்தை முன்வைப்பது போன்று இருந்து.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இனரீதியான போராட்டங்கள் உலகில் வெற்றி பெற்றது மிக அரிது என்ற கருத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.

போராட்டம் ஓரளவு பலத்தைக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் தீர்வை நோக்கிச் சென்றவர்கள் ஓரளவு அதிகார வலுவுடைய தீர்வுகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் போராட்டங்கள் வலுவிழந்த நிலையில், தங்களது அரசியல் அபிலாசைகளைப் முழுமையாகப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அரிது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: