பினாங்கு நிலச்சரிவு : 6 பேரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

லெங்கோக் லெம்பா பெர்மாய், தஞ்சோங் பூங்கா , ஜார்ஜ் டவுன், மலிவுவிலை வீடுகள் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கின.

இதுவரை 6 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, எட்டு பேர் இன்னமும் மண்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

நேற்று காலை 9.10 மணியளவில் தொடங்கப்பட்ட தேடும் பணிகள், இரவு 8 மணியளவில் நிறுத்தப்பட்டது.

தேடும் பணிகள் இரவு 8 மணிக்கு நிறுத்தப்பட்டாலும், போதுமான விளக்குகள் மற்றும் உபகரணங்கள் இருந்ததால், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணி சிறப்புப் படைகளான போம்பா ஸ்தோர்ம், ஸ்மார்ட் மற்றும் கே9 பிரிவுகள் தொடர்ந்து தேடும் பணிகளில் ஈடுபட்டதாக, பினாங்கு தீ மற்றும் மீட்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

“அனைத்து உடல்களும் கண்டுபிடிக்கப்படும் வரை தேடும் பணிகள் தொடரும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஹோஸ்ரீன் மற்றும் எர்வின் என அடையாளம் கூறப்பட்ட, நான்காவது மற்றும் ஐந்தாவது உடல்கள், முறையே இரவு மணி 11.31-க்கும், அதிகாலை 2.45 மணிக்கும் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் இருவரும் இந்தோனேசியர்கள்.

ஆறாவது உடல் அதிகாலை 3.59-க்கு கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், அவ்வுடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

  • பெர்னாமா