மூன்று தலைமுறைக்கும் மேலாக சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து, நீண்ட ஆயுள் காலம் வாழும் கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில் கோழி, ஆடு வளர்க்க கூடாது. கண்மாயில் மீன் பிடிப்பது இல்லை, சுத்த சைவ சன்மார்கத்தை கடைப்பிடிக்கும் கிராம மக்கள் அதிகமான ஆயுளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக சன்மார்க்க சங்கத்தில் இணைந்து, மூன்று தலைமுறைக்கும் மேலாக அந்த கிராம மக்கள் சுத்த சன்மார்க்கத்தை தீவிரமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கோழிகள், ஆடுகள் வளர்ப்பதில்லை. அப்பகுதியில் உள்ள குளத்தில் வளரும் மீன்களை யாரையும் பிடிக்க விடுவதில்லை, கிராமத்திற்குள் டாஸ்மாக் வாடை கிடையாது. பிரதி வாரம் திங்கள் கிழமை உழவு மாட்டிற்கும், உழவர்களுக்கும் விடுமுறை நாளாகவும், இந்த கிராமத்தில் அனைத்து விதமான பறவைகள் அதிகமாக உள்ளன. இதனை வேட்டையாட யாருக்கு அனுமதி கிடையாது. இங்குள்ள ஆண்களை திருமணம் செய்து கொண்டு வரும் பெண்கள் இவர்களது பழக்கத்திற்கு மாறி விடுகின்றனர். இப்பகுதியில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு சென்றாலும், அங்கேயும் பெண்கள் சன்மார்க்கத்தையே கடைபிடிக்கின்றனர். இவர்களது திருமணம் உறுதி மொழி எடுத்து, வேதமந்திரங்கள் இல்லாமல் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு வரதட்சனை வாங்குவதில்லை. தற்போது வரை, இப்பகுதியை சேர்ந்த நபர்கள் அடி, தடி, சண்டை என வழக்கிற்காக போலீஸ் ஸ்டேசன், நீதிமன்றம் சென்றதில்லை. இவர்கள் சன்மார்க்க வழியை கடைபிடித்து வருவதால் இவர்களில் பலர் 80 வயது முதல் 105 வயது வரை வாழ்ந்து வருகின்றனர். பலர் நோய்களுக்காக சிகிச்சை பெற மருத்துவமனை பக்கமே சென்றதில்லை என்றனர். இப்படியும், ஒரு அதிசயமான கிராமம் இருக்க முடியுமா என்று அனைவரும் வியப்படையும் அளவில் உள்ளன.

இது பற்றி அப்பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி கூறியதாவது:

வாடிமனைப்பட்டி கிராமத்தில் சன்மார்க்க கொள்கைகள் கடந்த 55 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறோம். அனைவரும் சுத்த சன்மார்க்கிகளாக மாறிவிட்டனர். இந்த கிராமத்தில் கோழிகள், ஆடுகள் வளர்க்காததற்கு சிறப்பான காரணம் வேரொன்றுமில்லை, அவைகளை வளர்த்தால் ஒரு கால கட்டத்தில் அவைகளை கொன்று தின்னும் எண்ணம் வளரும். எனவே தான் வளர்ப்பதில்லை என்றனர்.

கண்மாய்கள் அழியும்போது (தண்ணீர் வற்றும்போது) அதில் வளர்ந்த மீன்களையும் நாங்கள் பிடிப்பதில்லை. அவை தானாகவே இறந்து விடும். மீன்களைப் பிடித்தால் அதனை கொன்று தின்னும் எண்ணம் வளரும். எனவே, யாரும் மீன்களைப் பிடிப்பதில்லை. இப்பகுதியில், விவசாய நிலத்தில் உள்ள பயிர்களுக்குப் பூச்சி மருந்து அடிப்பதில்லை, அவை இறந்துவிடுமே என்ற எண்ணத்தில் அடி உரமாக வேப்ப புண்ணாக்கு, செடி, கொடி, இலைளை உரமாக போட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றோம்.

இங்கு பசு மாடுகள், காளை மாடுகள் மட்டும் வளர்க்கபடுகின்றன. இந்த கிராமத்திற்குள், அருகில் உள்ள கிரமத்தில் வளரும் கோழிகள், ஆடுகள் கூட எங்கள் பகுதிக்குள் நுழைவதில்லை, வெளியூர் நபர்கள் மது அருந்தி விட்டு வருவதில்லை, இங்குள்ளவர்கள் யாருக்கும் மது பழக்கம் கிடையாது.

பிறக்கும் குழந்தைகளுக்கு “அ” என்ற உயிரெழுத்தில் தான் தற்பொழுதெல்லாம் பெயரிடப்படுகின்றது. அதற்கு காரணம் என்னவென்றால், அருட்பெருஞ் ஜோதி மகா மந்திரத்தில் முதல் எழுத்து “அ” தான் அதனால் தான் இவ்வாறு, பெயர்களை வைக்கின்றோம் என்றார். என்ன தாக்கம் ஏற்பட்டிருந்தால், இவ்வளவு தீவிரத்தினை இந்த கிராமத்தில் ஏற்படுத்திய யாரேனும் இருக்க வேண்டும் என்று கேட்ட போது: அவர் பெயர் முத்தையா, கடந்த 55-க்கு முன்பு இந்த கிராமமே சன்மார்க்க வழியை கடைபிடிக்க, இவர் தான் காரணம் என்று தெரிவித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் இறந்துள்ளார். இப்படியும் ஒரு மனிதரா, ஆச்சரியம் தான் அங்கு மிஞ்சியது.

முத்தையா மகன் சத்தியசீலன் கூறியதாவது:

எனது தந்தை முத்தையா செய்த ஒரு தீவிரமான காரியம் என்னவென்றால், அந்தக் காலத்திலேயே சைக்கிளில் அன்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு 99 கிராமங்களுக்கு சென்று சன்மார்க்கக் கல்வியைப் புகட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது, 130 சன்மார்க்க கிளைச் சங்கங்கள் உள்ளன. தாலுகா அளவில் ஒவ்வொரு சன்மார்க்க சங்கம் கூட இல்லாத மாவட்டங்கள் பல இருக்கும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில், சன்மார்க்கக் கல்வி பரப்புவதில் மிக தீவிரமாக ஈடுபாட்டுடன் இருந்தாக இவ்வாறு தெரிவித்தார்.

இப்பகுதி மக்களின் சிறப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் நீண்ட ஆயுள் வாழலாம் என தெரிகிறது.

-பகத்சிங்

-nakkheeran.in

TAGS: