சௌதியில் மீண்டும் மிதவாத இஸ்லாமை நிலைநிறுத்த இளவரசர் உறுதி

மிதவாத இஸ்லாம் என்று தாம் கூறும் ஒன்றைத் தங்கள் நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சௌதியின் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார்.

சௌதி அரேபிய தலைநகர் ரியாதில் முதலீட்டாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதிலளித்த இளவரசர் முகமத் பின் சல்மான், 1979-ஆம் ஆண்டுக்குப் பின் தங்கள் நாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும், தீவிரவாதத்தின் எச்சங்களை தங்கள் நாட்டு அதிகாரிகள் வெகு விரைவில் அழிப்பார்கள் என்றும் கூறினார்.

அழிவுக்கு வழிவகுக்கும் கோட்பாடுகளுடன் அடுத்த 30 ஆண்டுகளை சௌதி அரேபியா செலவிடாது என்றும் கூறினார் முகமத் பின் சல்மான்.

இளவரசர் சல்மான்தான் அங்கு நடைபெறும் பொருளாதார மற்றும் சமூகச் சீர்திருத்தங்களுக்குப் பின்புலமாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பெண்கள் வாகனம் ஓட்ட நீண்ட காலமாக இருந்த தடை சமீபத்தில்தான் அங்கு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செளதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்படும் புதிய நகரம் மற்றும் பொருளாதார மண்டலத்தில் 500 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் இளவரசர் முகம்மது பின் சல்மான் அறிவித்துள்ளார்.

நியோம் எனப்படும் இந்தத் திட்டம், தொழில்நுட்ப மையத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று செளதி செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

25,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய இந்தத் திட்டம், ஆகாபா வளைகுடா வழியாக ஜோர்டான் மற்றும் எகிப்தை ஒரு பாலம் மூலம் இணைக்கும்.

ரியாதில் நடைபெற்ற எதிர்கால முதலீடு பற்றிய சர்வதேச மாநாட்டில் இதை இளவரசர் முகம்மது பின் சல்மான் அறிவித்தார்.

திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2025ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது எண்ணெய் வளத்தையே சார்ந்திருக்கும் செளதி அரேபியாவை, எண்ணெய் வளம் இல்லாத காலத்தில் எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்ற முயற்சியை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே இளவரசர் இந்த நகர்வை மேற்கொள்வதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். -BBC_Tamil