சேவியர்:  நஜிப் மக்கள் நலன் பேணும் பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும்

 

மலேசியப் பிரதமரும் நாட்டின் நிதி அமைச்சருமான நஜிப் ரசாக்கிற்கு நாட்டின் உண்மையான வறுமை நிலை நன்கு தெரியும்.  அதைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டுக்கான வரவு செலவு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு  நன்மையளிக்க கூடிய திட்டங்களை அதிகம் அறிவிக்க வேண்டும் என்று கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

 

இந்தியர்கள் கடந்த வாரம் தீபாவளியைக் கொண்டாடினார்கள், ஆனால் சிறு வியாபாரிகளிடம் ஒரே புலம்பல்: வியாபாரம்  இல்லை, வியாபாரம் மந்தம். ல் இது கிள்ளானில் மட்டுமின்றி நாடு முழுவதிலும் ஒலித்தது. பெரிய வணிக நிறுவனங்களிலிருந்தும்  இதே குறைபாடுகள் எதிரொலித்தன என்றாரவர்.

 

ஊதிய உயர்வு வேண்டும்

 

ஆக, இதற்கு அடிப்படைக் காரணம் ஏழ்மை! அதிகமான மக்கள், குறிப்பாக இந்தியர்கள், தங்கள் வருமானத்திலிருந்து அன்றாட செலவுகளையே ஈடுசெய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் வருடத்திற்கு ஒருமுறையே தீபாவளி என்றாலும், அதற்குக் கூடுதலாக எப்படிச் செலவு செய்ய முடியும்?

 

மிக முக்கியமாக B-40 என்று வரையறுக்கப்பட்ட ரிம 3900க்கு கீழ் மாத வருமானமாகப்  பெரும் 40 விழுக்காடு மக்களை  அதிகம் வாட்டிவதைக்கும்  அம்சங்களைக் கவனத்தில் கொண்டு அதனைக் களைவதில்  அரசாங்கம்  அதிகக்  கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

 

இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண  நாட்டில் B-40 என்று வரையறுக்கப்பட்டப் பிரிவினருக்கு உடனடியாக  ஊதிய உயர்வை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு இன்றைய பணவீக்கத்தையும், விலைவாசியையும் கருத்தில் கொண்டு, அமைதல் வேண்டும்.

 

மாணவர் இரவு விடுதி பணிப்பெண்ணா?

 

அரசாங்க மருத்துவமனைகள் சில மருந்துகளைக்கூட நோயாளிகள் சொந்தமாக வாங்கிவரும் படி  ஆலோசனைகளை வழங்குகிறன. உயர் கல்வி  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் குறைக்கப்பட்டு விட்டதால், மாணவர்கள் உணவுக்கே திண்டாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

சில  மாணவர்கள் பகுதி நேர வாடகை வாகன ஓட்டுனர்களாகவும், வேறு சிலர் இரவு விடுதிகளில் விருந்தினர் உபசரிப்பு  பணிப்பெண்ணாகவும் சேவையாற்ற வேண்டியுள்ளதாகக் குறைப்பட்டுக்கொள்கின்றனர்.  இது, நாட்டில் பெரிய அளவில் சமுகச் சீர்கேடுகளுக்கு இட்டுச் செல்லும் மிக, ஆபத்தான  அணுகுமுறையாகும் என்று எச்சரித்தார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

ஆகையால், சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

 

மலிவு விலை மதுபானங்களுக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை? 

 

இந்தியச் சமுதாயத்தின் உற்ற தோழனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முற்படும் பிரதமர், உண்மையாக  இச்சமுதாயத்தில்  நிலவும் சில சமூகச் சீர்கேடுகளுக்கான காரணங்களைக் கவனத்தில் கொண்டு, அதனைக் களைய அரசாங்க இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

 

நீண்டகாலமாக  அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத ஒரு விவகாரமாக மலிவு விலை மதுபானம் இருக்கிறது. மலிவு விலை மதுபானம் பல சமுகச் சீர்கேடுகளுக்கு இட்டுச் செல்வது  மட்டுமின்றி உயிரைப் பறிக்கும் ஒரு பொருளாக  இருப்பதைச் சமீப மருத்துவச் சஞ்சிகைகள் காட்டுகின்றன. மலிவு விலை மதுபானங்களைத்  தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

நடைப்பிணம்

 

இப்படிப்பட்ட மது வகைகளுக்கு அடிமையானவர்கள் மிக இளமையில் இறக்கின்றனர். பலர் உடல் ஆரோக்கியத்தை, வலிமையை இழக்கின்றனர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு இதனை அருந்துவதால் நுரையீரல் போன்ற முக்கிய  உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.. இதற்கான சிகிட்சைகள் செலவு மிக்கவை. ஆனால், சிகிட்சைக்குப் பின்பும் பலர் குடும்பத்துக்குச் சுமையாக மாறி விடுகின்றனர்.

 

இந்தப் பட்ஜெட்டில் மலிவு விலை மதுபானத்தைத் தடை செய்வதே, பிரதமர் இந்தியர்களுக்கு வழங்கும் சிறந்த பரிசாக அமைய வேண்டும் என்று சேவியர் வலியுறுத்தினார்.

 

குண்டர் கும்பல் நிலை மாற்றப்பட வேண்டும்     

 

இந்திய இளைஞர்களின் குண்டர் கும்பல் ஈடுபாட்டுக்கும்,  குடும்பம், ஏழ்மை, கல்வி, தொழில்  ஆகியவற்றுக்கும்  இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை அரசாங்கம் உணர வேண்டும். சிறையும் தண்டனையும் மட்டுமே அவர்களை திருத்தாது என்பதால் அவர்களின் குடும்பம் ஏழ்மையிலிருந்து விடுபட எல்லா மட்டத்திலும், வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதிகமான  இந்திய இளைஞர்களுக்கு அரசாங்க வேலைகளில் வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மிக மிக வலியுறுத்திக்  கேட்டுக்கொண்டார்.

 

பிடி3 தேர்வுக்குப் பின் மாணவனா? பயணியா?

 

மிக ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பங்களைச் சார்ந்த வளரும் பிள்ளைகளுக்குத் தங்கிப்படிக்கும் (ஆசிரமம்) பள்ளி வசதிகள்  வழங்கப்பட வேண்டும். தற்போதைய கல்வி முறையில் பிடி 3 தேர்வுக்குப் பின் எஸ்பிஎம் வரை பல மாணவர்கள் வெறும் பயணிகளாக வகுப்புகளில் அமர்ந்திருப்பதை ஆசிரியர்களும், கல்வி  இலாகாவும் நன்கு அறியும்.

 

அப்படிப்பட்ட மாணவர்கள் இளமையிலேயே கைத்தொழில்களைக் கற்க, தொழில்துறை, தொழில்நுட்பப் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும். அதற்குக் கல்வி முறையில் சீரமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம்  ஒரு தொழில்நுட்பப் பள்ளியாவது  இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

 

இதனால் மனிதவள மூலதனம் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுவதுடன் பதின்மவயதினரைக் குண்டர் கும்பல் வலையிலிருந்தும் மீட்டு, ஏழ்மையான அவர்களின் குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்கவும் உதவும். என்று ஆலோசனை வழங்கினார்  கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

உலகச் சந்தையில் எரிபொருள் விலை படும்வீழ்ச்சி அடைந்திருந்தாலும், இங்கு எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது, முடியாது, முடியாது என்று அடித்துக்கூறிய அவர் எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் என்றார்.

 

மலேசியா உயர்ந்த வருமானம் கொண்ட நாடா?

 

பிரதமர் கடந்த தேர்தலில் மலேசியாவை  உயர்ந்த வருமானம்  கொண்ட நாடாக மாற்றப் போவதாக வாக்களித்தார், ஆனால் அதற்கு மாறாக, கடந்த 5 வருடங்களுக்கு முன் இருந்ததைவிட  இன்று மிகக் குறைந்த வருமானத்தை மக்கள் பெற்று வருகின்றனர் என்பதை நாட்டின் நிதி அமைச்சருமான நஜிப் நன்கு அறிவார்.

 

மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 5 ஆண்டுகளுக்குமுன் கொடுத்த விலையுடன்  இன்றைய விலையை  ஒப்பிட்டால், மக்களின்  உண்மையான வருமானம் குறைந்து வருவதை மக்கள் அறியக்கூடும். பொருட்களின் விலை  உயர்ந்துவிட்டது  என்பதை விட ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ந்து விட்டது என்பதே சரி!

 

இவற்றுக்கு முக்கியக் காரணம்: ஊழல், அரசாங்கத்தின் முறைகேடு, ஊதாரித்தனம். வீண் விரயத்தின் விளைவால்  நமது நாணயம் வெகுவாக   அதன் மதிப்பை இழந்து விட்டது.

 

அரசாங்கம் அதன் வருமானத்தை உயர்த்திக்கொள்ள ஜிஎஸ்டி வரியை  விதித்துள்ளது. ஆனால், வாக்களித்தபடி  ஜிஎஸ்டி வரியின் பலனை மக்களை  அடையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர் என்றார் சேவியர்.