ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பேரழிவு; மக்களின் உணர்வை பிரதமர் புரிந்துக்கொள்ளவில்லை ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி, கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் வைத்திருந்த மேற்படி நோட்டுகள் வங்கிகள் மூலம் பெறப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டுகளை எண்ணும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இதில் 99 சதவீதம் நோட்டுகள் திரும்பி வந்து விட்டதாக கடந்த ஆகஸ்டு 30–ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக மேற்படி நோட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, நவம்பர் 8–ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி போராட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் தலைமையில் இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்பட 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடந்தது. ஆலோசனை முடிவில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி தேசிய அளவில் கருப்பு தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

கூட்டத்தில் 8-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் என தகவல்கள் தெரிவித்து உள்ளன.

ஆலோசனை கூட்டத்தை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசினார். ராகுல் காந்தி பேசுகையில், “நவம்பர் 8-ம் தேதி இந்தியாவிற்கு மிகவும் மோசமான நாளாகும். நவம்பர் 8-ம் தேதி கொண்டாப்படும், செய்திகள் தெரிவிக்கப்படும் என பிரதமர் மோடி பேசிஉள்ளார். இது பிரதமர் மோடியால் தேச மக்களின் உணர்வை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்பதை காட்டுகிறது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது மிகப்பெரிய ஒரு பேரழிவாகும். பிரதமர் மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை ரூபாய் நோட்டு ஒழிப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையால் அழித்து உள்ளார்,” என்றார்.

-dailythanthi.com

TAGS: