பூகிஸ் கடற்கொள்ளையர்களா?, மகாதிரை சிலாங்கூர் சுல்தான் கண்டித்தார்

 

“பூகிஸ் கடற்கொள்ளையர்கள்” என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஏளனமாகப் பேசியதற்கு சிலாங்கூர் சுல்தான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாதிரின் அக்கருத்து பூகிஸ் சமூகத்தினரை அவமதிக்கும் ஒரு முயற்சி என்பதோடு அவர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டிவிடுவதாகும் என்று சுல்தான் கூறினார்.

முன்னாள் பிரதமர் மகாதிரின் பேச்சு தேசநிந்தனைச் சட்டம் 1948 இன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலாங்கூர் அரச மன்றம் கருத்து தெரிவித்ததாக சுல்தான் தெரிவித்தார்.

மகாதிரின் பேச்சு எல்லையை மீறிவிட்டது. அது பூகிஸ் சமூகத்தினருக்கு எதிராக வெறுப்பையும் வேற்றுமைகாணலையும் பெரும் குழப்பம் ஏற்படும் அளவிற்கு தூண்டிவிடக்கூடும் என்று சிலாங்கூர் அரச மன்றம் கருதுவதாக சுல்தான் மேலும் கூறினார்.

மகாதிரின் குற்றச்சாட்டுகள் பூகிஸ்லிருந்து தோன்றிய சிலாங்கூர் சுல்தானிய மூதாதையர் மரபு மற்றும் வழித்தோன்றல்களை மறைமுகமாக அவமதிப்பதாகும் என்று சிலாங்கூர் சுல்தான் ஊடகங்களுக்கு சிலாங்கூர் அரச மன்ற செயலாளர் ஹனிபிஷா ஜாயிஸ் மூலம் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இதர இனங்களை ஏளனம் செய்வது அல்லது அவர்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவது ஆகியவற்றை அரசியல்வாதிகள் செய்யக்கூடாது ஏனென்றால் அது அமைதிக்கு மிரட்டலாகிவிடும் என்று சிலாங்கூர் சுல்தான் அரசியல்வாதிகளுக்கு நினைவூட்டினார்.

மலேசியாகினி மகாதிர் அலுவலகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறது.