சிறிலங்காவில் தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள் – அம்பலப்படுத்துகிறது அசோசியேட்டட் பிரஸ்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்கள் தாக்கி சித்திரவதை செய்யப்படுவதும், வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் தொடர்வதாக, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள 50 இற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் ஆண்கள் தாம் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டது தொடர்பான விபரங்களை அசோசியேட்டட் பிரசிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவராக தமது கதைகளை கூற இணங்கினர். அவர்களின் மார்பு, இடுப்பு, கால்களின் வடுக்கள் காணப்பட்டன. அசோசியேட்டட் பிரஸ், 32 மருத்துவ  மற்றும் உளவியல் மதிப்பீடுகளை ஆய்வு செய்ததுடன், 20 பேரை நேர்காணல் செய்தது.

உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த தரப்பில் ஒரு போராளிக் குழுவை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தம்மீது குற்றம்சாட்டப்பட்டதாக அவர்கள் கூறினர்.

8 ஆண்டுகளுக்கு முன் போர் முடிவுக்கு வந்த போதிலும், 2016  தொடக்கத்தில் இருந்து இந்த ஆண்டின் ஜூலை வரை சித்திரவதைகளும் மீறல்களும் இடம்பெற்றுள்ளன. எனினும் சிறிலங்கா அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.

கடந்த 40 ஆண்டுகளாக உலகில் மோசமான நாடுகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பி வந்தவர்களை நேர்காணல் செய்த பியர்ஸ் பிகோ என்ற தென்னாபிரிக்க  மனித உரிமைகள் விசாரணையாளர்,தாம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராத மிருகத்தனமான சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பதாக கூறுகிறார்.

சிறிலங்காவில் அதிகாரிகளின் பாலியல் மீறல்கள் நிலைத்திருப்பது மிகவும் அதிர்ச்சியாகவும், இதற்கு முன்னர் பார்த்திராததாகவும் உள்ளது.என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான ஆண்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில், தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினர்.  தம்மை சிறைபிடித்தவர்கள் பெரும்பாலானோர் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

சிலர், தம்மைக் கைது செய்து விசாரித்தவர்கள் படையினரு என்று, அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் மற்றும் முத்திரைப் பட்டிகளின் அடிப்படையில் கூறுகின்றனர். ஒருவர், உடைகளுடன் இராணுவ சீருடைகளும் தொங்கியதாகவும்,  பலர் இராணுவ சப்பாத்துகளை அணிந்திருந்தனர் என்றும் கூறியுள்ளார்.

எனினும், கடந்தவாரம் கொழும்பில் செவ்வி ஒன்றை அளித்த சிறிலங்கா இராணுவத் தளபதி  லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க,  சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

இராணுவம் தொடர்புபடவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில், காவல்துறையும் தொடர்புபடவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். இப்போது அதனைச் செய்வதற்கு எமக்கு எந்தக் காரணமும் இல்லை. என்றும் அவர் கூறினார்.

காவல்துறைக்குப் பொறுப்பான சிறிலங்கா அமைச்சர் ஒரு செவ்விக்கு கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். எனினும் அதனை அவர் பின்பற்றவில்லை.

சிறிலங்காவில் பரந்தளவிலான சித்திரவதைகள் இன்னமும் அதன் பாதுகாப்புப் படைகளால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டாலும், 26 ஆண்டுகால உள்நாட்டு போரில்,  வெளிவந்த போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதில் சிறிலங்கா தோல்வியடைந்துள்ளது.

சித்திரவதை செய்யப்பட்ட 52 ஆண்கள் பற்றிய  அசோசியேட்டட் பிரசின் கணக்கு குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,  கரிசனை கொண்டுள்ளார்.

ஐ.நா விசாரணையை முன்னெடுக்கும் வரை இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், தெளிவான இந்த அறிக்கைகள் கொடூரமானவையாக இருப்பதுடன், 2016- 2017 காலப்பகுதியில் இவை நடந்திருந்தால் எமது பக்கம் மிகவும் நெருக்கமாக ஆய்வு  செய்யப்பட வேண்டியதாகவும் இருக்கிறது.  என்றும் அவர் கூறியுள்ளார்.

தமது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் பாதுகாப்பதாக உறுதியளிக்கப்பட்ட பின்னர் தான் இவர்கள் தமது கதைகளை கூற இணங்கினர். சிறிலங்காவில் உள்ள தமது உறவினர்கள் பழிவாங்கப்படலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

சித்திரவதைக்குள்ளான ஆண்கள், தமிழ்ப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டதாக கூறினர். எனினும், ஏபியுடனான நேர்காணலில் சிறிலங்கா அரசாங்கம், போராளிக் குழுவின் அச்சுறுத்தல் இல்லை என்று கூறியுள்ளது.

ஒருவரின் முதுகில் 10 தடிப்பான வடுக்கள் இருந்தன. பெரும்பாலான ஆண்கள், தாம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறினர். சில வேளைகளில் முள்ளுக்கம்பிகள் சுற்றப்பட்ட பொல்லுகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

ஒருபாலுறவு சிறிலங்காவில் சட்டவிரோதம். வல்லுறவு ஒரு முக்கியமான சமூக களங்கமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள், கமது கதைகளை வெளிப்படுத்துவதில் உறுதியுடன் உள்ளனர்.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது உலகத்துக்கு தெரிய வேண்டும். என்று ஏபிக்கு கடந்த ஜூலை மாதம் அளித்த செவ்வியில் கூறினார் 22 வயதுடைய சாட்சி இலக்கம் 205.

தமிழர்களுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை. ” என்றும் அசோசிடேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

-puthinappalakai.net

TAGS: