சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் சுரேஷ்?!

எதிர்காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி)

அறிவித்திருக்கின்றது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உத்தியோகபூர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆரம்பித்தன. கிழக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தமிழ்ப் புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்புக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுமதியோடு முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றது. கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு தமிழீழ விடுதலைக் கழகத்துக்கு (புளொட்) விடுக்கப்பட்ட அழைப்பினை அதன் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் அப்போது நிராகரித்திருந்தார். அதற்கு அவர், “அரசோடு இணைந்து செயற்பட்டு வரும் எங்களினால், விடுதலைப் புலிகளின் அனுமதியோடு ஆரம்பிக்கப்படும் கூட்டமைப்பில் இணைய முடியாது. அது, குழப்பங்களை ஏற்படுத்தும்.” என்கிற பதிலை கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட முக்கியஸ்தர்களிடம் கூறியிருந்தாராம்.

16 வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில், கூட்டமைப்பினை ஆரம்பித்த போது இருந்த நான்கு கட்சிகளில் இரண்டு கட்சிகள் (தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்), கூட்டமைப்பிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப், கிட்டத்தட்ட வெளியேறிவிடும் கட்டத்தில் வந்து நிற்கின்றது. ரெலோ மாத்திரமே இன்னமும் மிச்சமிருக்கின்றது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படும் போது, “தமிழரசுக் கட்சியும் இல்லை. அதன் வீட்டுச் சின்னமும் இல்லை” என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தற்போது கூறுவது சரியானதுதான், நிராகரிக்கவும் முடியாது.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை அடுத்து, 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு ‘உதய சூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, கூட்டணியிலிருந்த இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் தங்களது பழைய கட்சியான தமிழரசுக் கட்சியையும், அதன் ‘வீட்டுச்’ சின்னத்தையும் தூசு தட்டி எடுத்து வந்தார்கள். முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் சின்னங்களையோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தையோ, கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக அறிவிப்பதில் விடுதலைப் புலிகள் அவ்வளவு அக்கறை கொள்ளாத நிலையில், அவர்கள், தமிழரசுக் கட்சியின் புத்துயிர்ப்புக்கு வழிவிட்டனர். அதுதான், 2004 தேர்தலில் வீட்டுச் சின்னத்தை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்க்க வைத்தது.

அதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தனியொரு கட்சியாக பதிவு செய்து, அதற்கு தேர்தல் சின்னமொன்றைப் பெறுவது தொடர்பில் விடுதலைப் புலிகள் எந்தவித ஆர்வத்தினையும் கொள்ளவில்லை. கூட்டமைப்புக்கான யாப்பு, சட்டத்துறை முக்கியஸ்தர்கள் சிலரினால் அப்போது எழுதப்பட்ட போதும், அதனை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான சு.ப.தமிழ்ச்செல்வன் ஆறப்போடுமாறு உத்தரவிட்டிருந்தார். புலிகள் என்றைக்குமே கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் அதிகார பீடமாக கிளிநொச்சியையே வைத்துக் கொள்ள நினைத்திருந்தனர். அதனாலேயே, கூட்டமைப்பு தனியொரு கட்சியாகவோ, அதிகாரபீடமாகவோ வளர்வதை அனுமதிக்கவும் இல்லை. மாறாக, தங்களது ஆணைகளுக்கு பிரதிபலிக்கும் தரப்பாகவே, தேர்தல் அரசியலில் கூட்டமைப்பினை வைத்துக்கொள்ள நினைத்தார்கள். அதில், அவர்கள் இறுதி வரையில் உறுதியாகவே இருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசிய அரசியலில் நேரடியாக தாக்கம் செலுத்தி முடிவுகளை எடுக்கும் நிலையில் இருந்த முப்பது ஆண்டுகளில், பெருவாரியாக ஒரு அரசியல் கட்சியின் சின்னமொன்றுக்கு வாக்களிக்கக் கோரியது 2004, பொதுத் தேர்தலில் ஆகும். அதுவே, இன்றைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக மாறி நிற்கின்றது. கூட்டமைப்பிலிருந்து யார் வெளியேறினாலும், யார் சங்கமித்தாலும், இன்னமும் அதன் தேர்தல் சின்னமாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னமே கோலொச்சுகின்றது. இதுதான், விடுதலைப் புலிகள் நேரடியாக ஆளுமை செலுத்த முடியாத இன்றைய நாட்களில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த பெரும் சாதகமான அம்சமும் ஆகும்.

இறுதி மோதல்களின் பின்னர், அதாவது விடுதலைப் புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்டதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், அரசியல் எழுத்தாளர்கள் உள்ளிட்ட தரப்புக்களினால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அது, 2015 பொதுத் தேர்தல் வரையில் நீளவும் செய்தது. ஆனால், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தினூடு வேறு கட்சிகள் ஆளுமை பெறுவதையோ, வீட்டுச் சின்னத்தின் மூலம் பெற்றிருக்கின்ற பிடியை விடுவதையோ தமிழரசுக் கட்சி விரும்பவில்லை. அதற்காக, கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டும் என்கிற பேச்சுக்கள் எழும் போதெல்லாம் சாக்குப் போக்குகளைச் சொல்லி தட்டிக்கழிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டது. அத்தோடு, கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்வதை விடுதலைப் புலிகளே விரும்பவில்லை என்றும் மறைமுகமாக கூறிவந்தது.

கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பின்னர், கூட்டமைப்பின் ஏக அதிகாரம் பெற்ற கட்சியென்ற நிலைக்கு தமிழரசுக் கட்சி வந்துவிட்டது. தன்னுடைய அதிகார நிலைகள் குறித்து கேள்வியெழுப்பும் பங்காளிக் கட்சிகளையும், நபர்களையும் அடக்கி வைப்பது அல்லது வெளியேற்றுவது என்கிற நிலையில், தமிழரசுக் கட்சி படுமூர்க்கமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. அதில் குறிப்பிட்டளவு வெற்றியும் பெற்றிருக்கின்றது.

கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளில் அதிகமாக கேள்விகளை எழுப்பும் கட்சியாகவும், கூட்டமைப்பின் தலைமையை அதிகமாக விமர்சிக்கும் கட்சியாகவும் ஈ.பி.ஆர்.எல்.எப்பே இருந்து வருகின்றது. அந்த நிலையில், கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஏகநிலைக்கு அது, பெரும் தடையாக இருந்து வந்திருக்கின்றது. அந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக சுரேஷ் பிரேமச்சந்திரனையும், ஈ.பி.ஆர்.எல்.எப்பையும் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்கான முனைப்புக்கள் மிக தீவிரமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதன்போக்கில், தமிழரசுக் கட்சி, எம்.ஏ.சுமந்திரனைக் கொண்டு விரித்த வலைகளில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆரம்பத்தில் தெரியாமலும், போகப்போக தெரிந்துமே விழ ஆரம்பித்தார். அது, கொடும்பாவி எரிப்பு அரசியல் வரை நீண்டது.

அந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் வெற்றிபெறக் கூடாது என்பது தமிழரசுக் கட்சியின் பெரு விருப்பமாகவும் இருந்தது. அதுவே, நடந்தது. அத்தோடு, தேசியப் பட்டியல் கோரிக்கை ஏனைய பங்காளிக் கட்சிகளின் உதவியோடு சுரேஷ் பிரேச்சந்திரனால் விடுக்கப்பட்டபோதும், அதனை சம்பந்தன் கண்டுகொள்ளவில்லை. ஆயினும், சுரேஷ் பிரேமச்சந்திரனின் வகிபாகத்தை (அரசியலை), வன்னி மாவட்டத்திலிருந்து தேர்வான சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்புக்குள் ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் சார்பில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்த போது, அவரையும் புறங்கையினால் கையாளும் நிலைக்கு தமிழரசுக் கட்சி வந்தது. அதன் அதிகபட்ச ஜனநாயக மீறுகை, புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில், சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்ற வாய்ப்பு மறுக்கப்படும் அளவுக்கு சென்றிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கூட்டமைப்பு தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்திய செயலமர்வில் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொள்ளாமையினாலேயே, அவருக்கு விவாதத்தில் உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிற வாதம் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனால் முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த வாதம் எவ்வளவு தூரம் சரியானது என்கிற கேள்வி எழுகின்றது. ஏனெனில், கூட்டமைப்பில் அங்கம் வகித்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப். என்கிற தனிக்கட்சிக்கான அங்கீகாரத்தினை பாராளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் வழங்கியிருக்க வேண்டும். அது, ஜனநாயகத்தில் அடிப்படையானது. இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறீதரன் உள்ளிட்டோர் உரையாற்றியிருக்கின்றனர். ஆனால், ஒரு பங்காளிக் கட்சிக்கான வாய்ப்பு முற்றாக மறுக்கப்பட்டதென்பது அச்சுறுத்தலான அரசியல் நிலைப்பாடாகும். அதனை, தமிழரசுக் கட்சியே முன்னின்று செய்திருக்கின்றது.

கூட்டமைப்பு என்கிற பொது அடையாளத்துக்குள் இருந்தாலும், தமிழரசுக் கட்சி என்கிற தனி அடையாளத்தை பலப்படுத்திக் கொண்டு தனிப்பயணம் மேற்கொள்வதே சுமந்திரனின் எதிர்கால இலக்கு. அதன்போக்கிலான அவரின் முயற்சிகளுக்கு சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். அதற்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற தரப்புக்களை, சுமந்திரன் தன்னுடைய சமயோசிதத்தினால் வெட்டி வீழ்த்துகின்றார். சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். அதன்போக்கில், ஈ.பி.ஆர்.எல்.எப். தானாகவே வெளியேற வேண்டும் என்பதற்காக சுமந்திரன், எந்த எல்லைக்கும் செல்ல முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. ஆயினும், இந்தப் பத்தியாளர் இந்தப் பத்தியை கீழ்க்கண்டவாறு நிறைவு செய்ய நினைக்கின்றார். அதாவது, தமிழ்த் தேசிய அரசியலில் வினைத்திறன்மிக்க மாற்று அரசியல் என்பது, கூட்டமைப்பு என்கிற பொது அடையாளம் தமிழரசுக் கட்சி என்கிற ஏக அடையாளமாக மாறிய சில காலத்துக்குப் பின்னரேயே நிகழும். அதுவரை, இந்த அலைக்கழிப்பு தொடரும்!

-புருஜோத்தமன் தங்கமயில்

-தமிழ்மிரர்

TAGS: