மெர்சல் வசூல் தமிழ் சினிமாவுக்கு சொல்லிச் சென்றது என்ன?

தமிழ் சினிமா இவ்வருடத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 175 நேரடி தமிழ் படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 10% க்கும் குறைவான படங்களே தியேட்டருக்கு மக்களைக் கொண்டு வந்த படங்கள். இந்த வருட டிசம்பர் இறுதிக்குள் 200 நேரடி தமிழ் படங்கள் ரீலீஸ் கணக்கில் சேர்ந்து விடும்.

தயாரிப்பு – வெளியீடு இரண்டிலும் சேர்த்து சுமார் ரூ 1000 ம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கும். இம் முதலீட்டை தயாரிப்பாளர்கள் லாபத்துடன் எடுக்க முடிந்ததா? என்ன நஷ்டம்? அதற்கு என்ன காரணம் என்பதை விவாத பொருளாக்குவதும், விபரங்களை துல்லியமாக பதிவு செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

பெரிய வசூல்

படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்து வந்தாலும், பட்ஜெட் படங்கள் வெற்றியும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெற்றியும் 2017ல் சம பலத்தில் பயணித்து வருகிறது. தீபாவளிக்கு ரீலீஸ் ஆன ‘மெர்சல்’, வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. குறுகிய நாட்களில் டிக்கட் விற்பனை மூலம் 150 கோடி, கேண்டீன், பார்க்கிங் மூலம் சுமார் 60 கோடியையும் தமிழக மக்களிடமிருந்து வசூல் செய்திருக்கிறது.

ரூ 210 கோடி

இணைய தளங்களில் சட்டவிரோதமாக படங்கள் திரையிடப்படுவதால் தியேட்டருக்கு குடும்பங்கள் படம் பார்க்க வருவது குறைந்துவிட்டது என்று கூறி வரும் நிலையில் மூன்று வாரங்களில் 210 கோடி வியாபாரம் எப்படி சாத்தியமானது?

தமிழகம்தான் ஆதாரம்

மெர்சல் படத்திற்கு ரீலீஸ் வரை தயாரிப்பாளர் முதலீடு செய்தது 150 கோடி ரூபாய் இதில் 70% சதவீத முதலீட்டை லாபத்துடன் தமிழகத்தில்தான் எடுத்தாக வேண்டும். 30% சதவீத முதலீடு பிற வியாபாரங்கள் மூலம் எடுக்கப்பட வேண்டும்.

80 கோடி வசூல்

விஜய் நடித்த எந்தப் படமும் தமிழ்நாட்டில் 100 கோடிக்கு வியாபாரம் ஆனது இல்லை. 80 கோடிக்கு மேல் மொத்த வசூல் செய்த படங்கள் இதுவரை இல்லை.

தயாரிப்பாளருக்கு

தயாரிப்பாளர் வினியோகஸ்தர்கள் மூலம் மெர்சல் படத்தை நேரடியாக ரீலீஸ் செய்ததால் முதல் ஐந்து நாட்களில் 75 கோடி ரூபாய், எஞ்சிய நாட்களில் 75 கோடியை மொத்த வசூலாகப் பெற முடிந்துள்ளது. தியேட்டர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கு, பாகுபலி படத்திற்கு பின் குறுகிய நாட்களில் மிகப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ள படம் மெர்சல். ஆனால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்குமா? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்!

-ஏகலைவன்

tamil.filmibeat.com