‘வெறுமனே இனவாதத்தைத் தூண்டுகின்ற இழிவான அரசியலை மேற்கொள்ளாதீர்கள்’

“தமிழ் அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி, முஸ்லிம் அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி, வெறுமனே இனவாதத்தைத் தூண்டுகின்ற எந்தவொரு இழிவான அரசியல் கலாசாரத்தையும் மேற்கொள்ளாதீர்கள்” என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சுமார் 5,000 மாணவர்களுக்குப் பாடசாலைப் புத்தகப்பை, எழுது கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இன்று (12) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்ட அறைகூவலை விடுத்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

“இனவாதத்தை சிந்தித்து, பேசிப்பேசி, தூண்டி, செயற்பட்டு அரசியல் செய்கின்ற வக்கிரபுத்திக் கலாசாரத்தை, தமிழர்களும் முஸ்லிம்களும், சிங்களவர்களும் இணைந்த எங்களது மாகாண சபை ஆட்சிக் காலத்திலே மாற்றியிருந்தோம்.

“எங்களுடைய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு மூலை முடுக்கிலும் இனவாதம் என்ற பேச்சுக்கே இம்மியளவும் இடமில்லாமல் மூவினங்களும் இணைந்து ஆட்சி செய்திருந்தோம்.

“எமது ஆட்சியிலே நாங்கள் இன பேதம், அரசியல் வேறுபாடு, மொழிப் பாகுபாடு, பிரதேச ஓரங்கட்டல் என்று எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து ஆட்சி செய்தோம்.

“ஒற்றுமையாக ஒரே சிந்தனையில் மூழ்கியிருந்து சவால்களை முறியடித்து சகவாழ்வு ஆட்சியைச் சாதித்துக் காட்டினோம்.

“கிழக்கு மாகாண ஆட்சி சுமார் ஒரு மாதம் முடிந்த கையோடு, இனவாதத்தைத் தூண்டி மீண்டும் எரியும் நெரிப்பில் எண்ணெய் வார்த்தவர்கள் யார் என்பதை எல்லோரும் நன்கு அறிவார்கள்.

“அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி தமிழ், முஸ்லிம் ஐக்கியத்தைச் சீர்குலைப்பார்களாயின், அத்தகைய சுயநல அரசியல்வாதிகளை மக்களாகிய நீங்கள் அடியோடு நிராகரித்து குழப்பவாதிகளின் வக்கிரமத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

“வடக்கு, கிழக்கிலே தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்துதான் உரிமைகளைப் பெற்றுப் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை இனவாதத்தைத் தூண்டும் சுயநல அரசியல்வாதிகள் புரிந்துகொண்டாக வேண்டும்” என்றார்.

-tamilmirror.lk

TAGS: