3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இன்று காலை பாரிய கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பித்த இந்தப் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை இடம்பெற்றது.

அனுராதபுர சிறையில் உண்ணாவிரதமிருந்த 3 அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், 132 அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி இந்தப் பாரிய பேரணி நடத்தப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள், உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் என, பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணி, யாழ். நகரில் உள்ள ஐ.நா அமைப்பின் பணியகம், ஆளுனர் செயலகம், ஆகிய இடங்களில் மனுக்களைக் கையளித்து விட்டு யாழ். மாவட்டச் செயலகத்தில் நிறைவடைந்தது. அங்கும் மனு கையளிக்கப்பட்டது.

-puthinappalakai.net

படங்கள் – நன்றியுடன் சபேஸ், சாளின் (கீச்சகம்)

TAGS: